ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீதிமன்றுக்கு ஆஜராகுமாறு அழைப்பு

எம்.எப்.எம்.பஸீர்-

முன்னாள் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிக்க ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2015இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது அபேட்சகர்களில் ஒருவராக இருந்த ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறி போலி ஆவணம் ஒன்றினை தயாரித்து அதனை பகிரங்கப்படுத்திய விவகாரம் தொடர்பில் முன்னாள் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுவாராச்சி இந்த அறிவித்தலை விடுத்தார். இதனையடுத்து போலி ஆவணம் தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு 17ஆம் திகதி முதல் ஜூலை 28வரை இது தொடர்பிலான வழக்கை தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் தீர்மானித்தது.

மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அறிவித்தல் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்கள் எனவும், பணி சுமை காரணமாக அவர்களால் நேற்று மன்றுக்கு ஆஜராக முடியாது என முன்கூட்டியே அறிவித்துள்ளதாகவும் பிரதான அரச சட்டவாதி நவரத்ன பண்டார நீதிமன்றுக்கு அறியப்படுத்தினார்.

வழக்கு முற்றாக முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்களை அடிப்படையாக கொண்டுள்ளதால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்ற காரணத்தினால் வழக்கை விசாரிக்க வேறு ஒரு திகதியை வழங்குமாறும் அவர் கோரினார். இதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்தது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இரகசிய உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக கூறி போலி ஆவணம் ஒன்றை பகிரங்கப்படுத்திய குற்றச்சாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

அதன் பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி அல்லது அதனை அண்டிய தினமொன்றில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலமையகத்தில் வைத்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை பாதிக்கும் விதமாக, அதாவது மைதிரிபால சிறிசேனவிற்கு பாதகம் ஏற்படுத்தும் விதமாக 2014 நவம்பர் மாதம் முதலாம் திகதி ரணில் மற்றும் மைதிரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் எனக் கூறி போலியான ஆவணத்தைக் காட்டி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி ஒருவரை தேர்தெடுக்கும் சட்டத்தின் 80 (1) ஏ அத்தியாயத்துடன் இணைத்துக் கூறப்படும் 80 ஆவது அத்தியாயத்தின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக திஸ்ச அத்தநாயக்க மீது சட்ட மா அதிபர் குற்றம் சுமத்தியிருந்தார்.

2008 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சர்வதேச சிவில் மற்றும் அரசியல் இனக்கச் சட்டத்தின் 3 (1) அத்தியாயத்தின் கீழும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனை நிரூபிக்க மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 15 சாட்சியாளர்களையும் 5 தடயப் பொருட்களையும் பட்டியலிட்டு நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (வீரகேசரி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -