2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலமா கட்சி இன்று வரை தனது அரசியல் கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
உலமா கட்சியின் அரசியல் செயற்பாடு, எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்ததாவது,
1.உலமாக்கள் தலைமையிலான அரசியல் மூலமே இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் வழி காட்டலை கொடுக்க முடியும் என்பதை உறுதியாகக்கொண்டு செயற்படுகிறோம்.
2. மக்களின் வாக்குகள் என்பன தலைவர்களின் உல்லாச வாழ்க்கைக்கான பஞ்சு மெத்தைகள் அல்ல. அவை நெருப்புக்கிடங்குகள். நிச்சயம் மக்களிடமிருந்து பெற்ற வாக்குகளுக்காக இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.
3. வாக்குப்பலத்தை காட்டி, பதவிகளை பெறாமல் முஸ்லிம்களின் உரிமைகளை பெற அந்த வாக்குகளை ஜனநாயக ஆயுதமாக பாவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
4. முஸ்லிம் சமூகம் முடிந்தளவு எதிர்க்கட்சி அரசியல் செய்வோரையும் பலப்படுத்த வேண்டும்.
5. நமது மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றினால் அவர்கள் எந்தக்கட்சியில் இருந்தாலும் அவர்களை மீண்டும் தெரிவு செய்யக்கூடாது என்பதை சமூகத்துக்கு தொடராக அறிவூட்டுகிறோம்.
6. பொது மக்கள், பணத்துக்கும் சாராயத்துக்கும் பகட்டுக்கும் மயங்கி வாக்களிக்கும் நிலை மாற வேண்டும்.
7. மக்கள் ஆதரவு பெற்ற முஸ்லிம் கட்சி என்பது வெறுமனே சபைகளில் பேசுவதுடன் மட்டும் நிற்காது மக்கள் பிரச்சினைகளை தேசிய, சர்வதேச மயப்படுத்தும் வகையில் ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டங்கள், சத்தியக்கிரகம் போன்றவற்றிலும் ஈடு பட வேண்டும்.
8. அரசியலில் உண்மை, நேர்மை, வாய்மை எனும் இஸ்லாமிய அரசியலை கடைப்பிடிக்க வேண்டும்.
9. ஒருவருக்கு வாக்களிப்பதாயின் அவர் குறைந்தது அந்தப்பிரதேசத்தில் குடும்பத்துடன் வாழ்பவராக அல்லது அவரது இரத்த உறவுகள் அப்பகுதியின் வாக்காளர்களாக இருக்க வேண்டும்.
10. முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், தீர்வுகள் வெள்ளித்தட்டில் வைத்து வழங்கப்பட மாட்டாது. இதற்காக அரசியல் மூலம் பணம், பதவிகளை எதிர் பார்க்காத, இஸ்லாத்தை படித்து வாழ்வில் முடிந்தளவு நடைமுறைப்படுத்தும் சமூகவாதிகளினதும் அவர்களுக்கான மக்களின் ஆதரவின் மூலமுமான ஜனநாயக போராட்டத்தின் மூலமே பெற முடியும்.
11. முஸ்லிம் சமூகம் தம்மிடையே உள்ள இயக்க, ஜமாஅத் கருத்து வேறுபாடுகளிலிருந்து நீங்கி "நாம் அனைவரும் முஸ்லிம்கள்" என்ற உலமா கட்சியின்கொள்கையில் ஒற்றுமைப்பட வேண்டும்.
12. முஸ்லிம்களுக்கிடையில் இரத்தம் ஓட்டப்படுவது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.
13. உலமா கட்சிக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால் முஸ்லிம் தனியார் சட்டம் இருப்பது போல் முஸ்லிம்களிடமிருந்து ஸக்காத்தை தனியான வரியாக பெற்று ஏழைகளின் வாழ்வை செழிப்பாக்கும் வகையில் பொருளாதார திட்டத்தை கொண்டு வர பாராளுமன்றத்தில் முயற்சி செய்வோம்.
14. உலமா கட்சியின் சுயநலனற்ற அரசியல் மூலம் துன்யாவில் வெற்றி கிடைக்காவிட்டாலும் எமது தூய முயற்சிக்காக ஆகிராவில் நிச்சயம் நன்மை கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
15. இலங்கை முஸ்லிம்கள் சிங்கள தேசிய அரசியலை பொறுத்த வரை அனைவரும் ஒரு பக்கம் நிற்பதை தவிர்த்து அனைத்து தரப்புடனும் இணக்க அரசியல் செய்ய வேண்டும்.
16. முஸ்லிம்கள் தமது தனித்துவ அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு தமிழ் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளுடன் சமூக உரிமைகளை மையப்படுத்திய ஒப்பந்தங்களுடன் பயணிக்க வேண்டும்.
17. முஸ்லிம் சமூகம் அரசியலை உணர்வுபூர்வமாக பார்க்காமல் அறிவுப்பூர்வமாக பார்க்க வேண்டும். அரசியல் கட்சி என்பது மக்களின் தேவைகளுக்குத்தானே தவிர கட்சிகளுக்காக மக்கள் இல்லை. மக்கள் அதிகாரத்தை வழங்கியும் மக்களை பார்க்காமல் இருக்கும் கட்சி எந்தக்கட்சியாக இருந்தாலும் அதனை நிராகரிக்கும் தெளிவு மக்களிடம் வர வேண்டும்.