எம்.ரீ.ஹைதர் அலி-
மிக நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த காத்தான்குடி ஊர் வீதியினுடைய புனரமைப்பு பணிகள் நேரடியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக தற்போது மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காத்தான்குடியிலுள்ள மிகப் பிரதான வீதிகளுள் ஒன்றான காத்தான்குடி ஊர் வீதியானது நீண்ட நாட்களாக புனரமைப்பு செய்யப்பட்டு பூரனப்படுத்தப்படாத நிலையில் காணப்பட்டதனால் இவ்வீதியினூடாகவும், வீதியில் காணப்படும் குறுக்கு வீதிகளினூடாகவும் பயணிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர்.
இவ்வீதி புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி முடிவுறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு தொடர்ச்சியாக கடிதங்களின் மூலமாகவும், நேரடியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக ஏற்கனவே இவ்வீதியினை புனரமைப்பு செய்து கொண்டிருந்த ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தத்தினை ரத்து செய்து நேரடியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக இவ்வீதி தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்புனரமைப்பு பணிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அங்கு புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் பொறியியலாளர்களோடு புனரமைப்பு தொடர்பான மேலதிக ஆலோசனைகளையும் பரிமாறிக் கொண்டார். மேலும் இவ்வீதியின் புணரமைப்பு பணிகள் அனைத்தையும் எதிர்வரும் மே மாதத்திற்கிடையில் பூரணப்படுத்தி தருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பொறியியலாளர் உறுதியளித்துள்ளார்.
மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஊர் வீதியில் மூடிகள் இடப்படாத நிலையில் காணப்பட்ட வடிகான்களுக்கான 700 வடிகான் மூடிகள் தற்போது இடப்பட்டுள்ளதோடு, தொடர்ச்சியாக மூடிகள் இடப்படாத ஏனைய இடங்களுக்கும் வடிகான் மூடிகள் இடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, மேலும் காத்தான்குடி நகரசபையூடாக ஊர் வீதி வடிகானினை துப்பரவு செய்யும் பணிகளும் மிக விரைவில் இடம் பெறவுள்ளன.