போர்க்குற்ற விசாரணையில் மேரி கொல்வினின் மறைந்து போன சாட்சியம்.

ஆய்வாளர் எம்.எம்..நிலாம்டீன்-
ஐ.
நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள சூழலில் லண்டன் 'சன்டே டைம்ஸ்' ஊடகவியலாளர் மேரி கத்தரின் கொல்வின் சிரியப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டார். அன்னாரின் நினைவு தினம் கடந்த மாதம் 22 ஆம் திகதி 5 ஆவது நினைவு தினம் (12.01.1956. 22-02-2012)

'மேரி கத்தரின் கொல்வின் ஒரு அமெரிக்கர். அவர் பணியாற்றியது லண்டனில் உள்ள ஊடகத்துக்காக. அவர் மரணமானது சிரியாவில்.

இப்படி பல அந்நிய நிலைகள் இருந்த போதிலும் இலங்கை விவகாரத்துடன் அவர் நெருக்கம் கொண்டிருந்தார்.

ஈழத்தில் மேரி கொல்வின்

2001 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாத நடுப்பகுதியில் 'ஓயாத அலைகள் - 3' தொடர் நடவடிக்கைகளின் மூலம் விடுதலைப் புலிகள் வெற்றியின் உச்சத்தைத் தொட்டிருந்த காலம்.தமிழ் - சிஙகளப் புத்தாண்டை முன்னிட்டு சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கம் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது.

எனினும், புலிகள் தாக்கினால் பதில் தாக்குதல் நடத்துவோம் என்ற பதிலை இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது. அத்தகைய சூழிலில் தான் மேரி கொழும்புக்கு வந்து இரகசியமாக வன்னிக்குச் சென்றார். உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் எவராலுமே வன்னிக்குப் பயணம் மேற்கொள்வதை நினைத்துக் கூடப் பார்க்காத அளவுக்கு அப்போதைய சூழல் இறுக்கமாக இருந்தது.

மேரி கொல்வின் மீது துப்பாக்கி சூடு
வன்னி நிலைமைகளை நேரில் பார்வையிட்டு பின்னர் மேரி கொல்வின் ஏப்பிரல் 15 ஆம் திகதி இரவு அரச கட்டுப்பாட்டிலுள்ள வவுனியாவுக்குள் இரகசியமாக நுழைய முயன்றார்.

முன்னரங்க இராணுவ வேலியைக் கடந்து செல்ல முயன்றபோது ரோந்து சென்ற இராணுவ அணியொன்றினால் அடையாளம் காணப்பட்டார். படையினர் அவர் மீது தாக்குதல் தொடுத்தனர்.தான் ஒரு ஊடகவியலாளர் என்று உரத்துக் கத்தியபோதும் தன் மீது சரமாரியாக ஆர்.பி.ஜி குண்டுகள் ஏவப்பட்டதாக கூறியிருந்தார் அவர்.

இந்தத் தாக்குதலில் அவரது தலை, நெஞ்சு, கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரது இடது கண் நிரந்தரமாகவே பார்வையின்றிப் போனது. அன்று முதல் ஒற்றைக்கண் பார்வையை இழந்து வி;ட்டார்.

அவர் விடுதலைப் புலிகளுடன் இராணுவ வேலியைக் கடக்கவில்லை. ஆயுதம் தரிக்காத பொதுமக்களுடன் தான் அவர் இராணுவ வேலியைக் கடக்க முயன்றார்.

புலிகள் தாக்கினால் மட்டுமே பதில் தாக்குதல் நடத்துவோம் என்று அரசாங்கம் கூறியிருந்த நிலையில், நிராயுத பாணியான இவர் ஊடகவியலாளர் என்று கூக்குரலிடப்பட்ட போதும் தாக்கப்பட்டார்.

காயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வரை இவர் தாக்கப்பட்டார். மிரட்டப் பட்டார்.

மறுநாள் அரசாங்கத் தகவல் திணைக்களம், விசா காலாவதியான பின்னரும் இவர் நாட்டில் தங்கியிருந்ததாகவும், விடுதலைப் புலிகளின் இரகசிய நடவடிக்கைக்காக வந்தவர் என்றும் கூறியது.

எனினும், அவர் மீது எந்தக் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்காமல் வெளியேற ஆரம்பித்த போது அப்போதைய அரசாங்கம் அவரை வன்னிக்கு அழைத்துச் சென்றதாக 6 பொது மக்களைகக் கைது செய்தது.

ஓற்றைக் கண் மேரி கொல்வின் சிரியாவில் கொல்லப்பட்டார்

ஒரு கண்ணை இழந்த நிலையிலும் மேரி கொல்வின் போர்முனைச் செய்தி சேகரிப்பையோ இலங்கையுடனான தொடர்புகளையோ விட்டுவிடவில்லை.

அது போலவே சாவை எதிர்கொண்டு செய்திகளைத் திரட்டும் துணிச்சலும் மாறவில்லை. அதனால்தான் அவர் வெளிநாட்டு செய்தியாளர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட சிரியாவுக்குள் இரகசியமாகச் சென்றார். சிரியப் படைகள் அவரைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தின.

இறப்பதற்கு முதல்நாள் சிறிய குழந்தைகள் போரில் கொல்லப்பட்ட காட்சிகள் அடங்கிய தொகுப்பை அவர் வழங்கியிருந்தார். அதுவே அவரைக் குறி வைக்கக் காரணமாயிற்று.

இலங்கையில் அவர் எதிர்கொண்டது போலவே அங்கேயும் அவரைக் குறி வைத்து ஆர்.பி.ஜி.கள் தான் முழங்கின. இலங்கையில் ஒரு கண்ணை இழந்து தப்பிக் கொண்ட அவரால் சிரியாவில் தப்ப முடியவில்லை.

மேரி கொல்வின் அம்மையாரின் சாகசங்கள்.

கிழக்குத் தீமோர், செச்சன்யா, லிபியா, ஈராக், லெபனான், இலங்கை ஆகிய நாடுகளிலும், பிராந்தியங்களிலும் அவர் கால் பதித்திருக்கிறார். அவற்றில் நீடித்த அவலங்கள் பற்றிப் பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார். அது மாத்திரமன்றி, போர்க்களங்களில் இழைக்கப்பட்ட அநியாயங்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார்.

இவற்றில் கிழக்குத் திமோர் சம்பவம் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பிய கிழக்குத் தீமோர் வாசிகளை இந்தோனேசியா ஆயுதப் படைகள் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலகட்டம் தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட அகதிகள் டில்ல நகரின். ஐ.நா அலுவலகத்தில் தஞ்சம் கோருகிறார்கள்.

அந்த அலுவலகத்தை இந்தோனேசியப் படைகள் சுற்றிவளைத்த போது ஐ.நா அதிகாரிகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அகதிகள் தமது தலை விதியைத் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்ற எண்ணத்துடன் வெளியேற முற்படுகிறார்கள். ஆனால், அந்த மக்களோடு மக்களாக இணைந்திருந்த மேரி கொல்வினும் அவரது இரண்டு சகாக்களும் வெளியேற மறுக்கிறார்கள். அவர்களது ஒலிவாங்கிகள் ஓயவில்லை. உள்ளே நடப்பவற்றை வெளியுலகிற்கு சொல்கின்றன.

ஈற்றில் சர்வதேச சமூகம் தலையிடுகிறது. இந்தோனேசியப் படைகள் அகதிகளை வெளியேற அனுமதிக்கின்றன. ஒரு செய்தியாளர் என்பதற்கு அப்பால், சுயநலம் மறந்து தம்மைச் சார்ந்திருந்த மக்களுக்காக தமது உயிரையும் இரண்டாம் பட்சமாகக் கருதி அன்று மேரி கொல்வின் மேற்கொண்ட நடவடிக்கை ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருந்தது

ஆனால், அவரது மரணம் உலகின் பல மூலைகளில் ஆயுத நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு பேரிழப்பாகும்.

இலங்கை அரசாங்கத்தின் அனுமதி பெறாமல் வன்னிக்குள் பிரவேசித்து மீண்டும் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைய முயன்ற தருணத்தில் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் இடது கண்ணை இழந்ததைக் குறிப்பிடலாம்.

உண்மையில், மேரி கொல்வினின் கட்டுரை இலங்கையின் நெருக்கடி குறித்த சர்வதேச சமூகத்தின் பார்வையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், அதில் மிகையில்லை. இறுதிக்கட்டப் போரின்போது, எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் விடுத்த கோரிக்கைகளை உலக நாடுகளின் தலைவர்களிடமும், ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரிகளிடமும் கொண்டு செல்வதற்குப் பாடுபட்ட விதமும் முக்கியமானது. இது பற்றி மேரி கொல்வின் எழுதிய கட்டுரை போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஒரு தேர்ந்த செய்தியாளராக நெருக்கடி பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு, மனித நேயமுள்ள மனுஷியாக மக்கள் உணர்வலைகளைப் புரிந்து கொள்வதுடன் மாத்திரமன்றி, தேர்ந்த கட்டுரையாளராக தாம் அறிந்தவற்றை உலகறியச் செய்த அவரது அவரது ஆற்றல் உலகின் பல நெருக்கடிகளுக்கு சாட்சியங்களாக அமைந்துள்ளன.

லெபனானில் இருந்த பலஸ்தீன அகதிகள் முகாமில் நிகழ்ந்த அவலங்கள் குறித்த அவரது கட்டுரை, அந்த நெருக்கடி எவ்வளவு சிக்கலானது.

இந்தப் பெண்ணின் தலையில் சூட்டப்பட்ட கிரீடங்கள் பற்றியே பலர் அறிந்திரப்பார்கள். ஆனால், அவரது கால்களில் இருக்கக்கூடிய தழும்புகள் பலருக்குத் தெரிந்திருக்க மாட்டாது. எதை மறைக்க வேண்டுமென எதேச்சாதிகாரிகள் விரும்புகிறார்களோ, எது வெளியுலகத்திற்குத் தெரியவிடக் கூடாதென சர்வாதிகாரிகள் கருதுகிறார்களோ, அதனைச் தேடிச் செல்லும் பயணம் மிகவும் ஆபத்தானது. தாம் விரும்பும் இடத்தை அடைவதைப் போன்றே, அந்த இடத்தில் இருந்து வெளியேறுவதும் கடினமானது.

யாரும் அணுக முடியாததாக கருதப்பட்ட ஈராக்கின் பஸ்ரா நகருக்கு ஆயுதக் கடத்;தல் காரர்களின் உதவியுடனேயே மேரி கொல்வின் சென்றார். செச்சன்யா கிளர்ச்சியாளர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்த போது அவருக்குத் தப்பிக்க வழியேதும் இருக்கவில்லை. அவர் 12,000 அடி உயரமான மலையைக் கடந்து ஜோர்ஜியாவிற்கு தப்பிப் பிழைத்தார். இந்தப் பயணம் கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில் பல நாட்கள் நீடித்ததொன்றாகும்.

மேரி கொல்வினைப் பொறுத்த வரையில், ஒரு தேசத்தின் கட்டுக் கோப்புக்களை விடவும் சர்வதேச மட்டத்தில் பெறுமதி உடையவராகத் திகழும் மனிதம் என்ற விடயமே மேலோங்கிருக்கிறது. அந்த மனிதத்தை தமது வார்த்தைகள் மூலம் படம் பிடித்துக் காண்பிப்பதற்கு கட்டுக்கோப்புக்கள் தடையாக இருக்குமாயின், அந்தத் தடைகளை மீறுவதற்கு அவர் தயங்கியதே இல்லை.

சிரியாவில் நிகழும் கொடுமைகள் பற்றி விபரித்த சமயத்தில், ஒரு பச்சிளம் பாலகனின் மரணம் பற்றி அவர் வர்ணித்தார். அந்த சமயத்தில் ஊடக தர்மம் பற்றி இன்னொரு செய்தியாளர் கேட்டார். ஒரு குழந்தையின் மரணத்தை இவ்வளவு விலாவாரியாக விபரிப்பது உண்மையிலேயே தேவைதானா?

அதற்கு மேரி கொல்வின் அளித்த பதில்: சிரியாவில் நிகழும் மனித அவலங்கள் பற்றி அந்தப் பாலகனின் மரணத்தால் தான் உலகம் அறிந்து கொள்ளுமானால், அதுவே முக்கியமானது.

இன்று மேரி கொல்வினின் மரணத்தால் சிரியாவின் நிலவரம் பற்றி உலகம் அறிந்திருக்கிறது என்றால், அது அவரது மகோன்னத வெற்றியே.

இறுதிப் போரின் சாட்சியாளர் மேரி கொல்வின்

2001 இல் வன்னி சென்றிருந்த போது விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான பா. நடேசன், புலித்தேவன் போன்றோருடன் உருவான தொடர்பு, மேரி இறக்கும் வரை தொடர்ந்தது.

போர் முடியும் தறுவாயை அடைந்திருந்த போது விடுதலைப் புலிகளால் இனிமேல் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலை உருவானது. ஒரு தரப்பினர் தாம் இறுதிவரை போரிட்டு மடியும் முடிவில் இருந்தனர். மற்றொரு தரப்பினர் சரணடையும் முடிவை எடுத்தனர். சரணடையும் புலிகள் சர்வதேச மத்தியஸ்தம் ஒன்றைப் பெற விரும்பினர். அதற்காக அவர்கள் மேரி கொல்வினைத் தொடர்பு கொண்டனர்.

சர்வதேச மத்தியஸ்தமானார்.

இந்தத் தொடர்பு பா. நடேசன், புலித்தேவன் ஆகியோர் கொல்லப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பு வரை நீடித்தது. ஐ.நா பொதுச் செயலாளரின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார், அமெரிக்கா, பிரித்தானிய நிர்வாகங்கள், இலங்கை அரசு பல மட்டங்களில் இந்த சரணடைதலுக்கான முயற்சிகளை மேரி கொல்வின் மேற்கொண்டார்.

அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு வெள்ளைக் கொடியுடன் சரணடையுமாறு உத்தரவாதம் தரப்பட்டதாக, பின்னர் லண்டன் சண்டே டைம்ஸில் எழுதியிருந்தார்.

ஆனால், அவ்வாறு சரணடையச் சென்ற பா. நடேசன், புலித்தேவன் ஆகியோர் சடலங்களாகவே காண்பிக்கப்பட்டனர். ஏனையோரில் எத்தனை பேர் உயிருடன் உள்ளனர் என்பதும் தெரியாது. மேரி கொல்வின் மேற்கொண்ட இந்த இணக்க முயற்சி பற்றிய சாட்சியப் பதிவுகள் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது.

இலங்கைப் படையினர் மீது சுமத்தப்படும் போர்க் குற்றச்சாட்டுக்களில் சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரமும் ஒன்று. அரசாங்கம் ஒரு கட்டத்தில் இத்தகைய இணக்க முயற்சி நடக்கவே இல்லை என்றது.

பின்னர் அப்படி ஒன்று நடந்ததை ஏற்றுக் கொண்ட போதும், சரணடைய எவரும் வெள்ளைக் கொடியுடன் வர்வில்லை என்றது. இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரமாக அந்த நகர்வில் தொடர்புபட்ட ஒரு பொதுத்தரப்பினராக மேரி கொல்வின் மட்டுமே இருந்தார்.

இலங்கையில் நெடைபெற்ற சரணடைந்த புலிகள் பற்றி போர்க்குற்ற விசாரணைகள் ஒன்று இடம்பெறும் சூழல் உருவாகும்போது இவரது வெற்றிடம் நியாயம் கோரும் தமிழ்த் தரப்புக்கு பெரும் இழப்புத்தான். ஒரு சிறந்த சாட்சியம் உலகம் அறிந்த சாட்சியாளர் மடிந்து போனது என்பது மிகவும் வருந்தத்தக்கதுதான்.

இவரது மரணம் நிகழ்ந்துள்ளது மிகவும் கனடிமானது.ஒரு நிலையான சாட்சி மறைந்து விட்டது என்பது சர்வதேச அரங்கில் பேரிளப்பாகும்..

இன்று மேரி கொல்வினின் மரணத்தால் சிரியாவின் நிலவரம் பற்றி உலகம் அறிந்திருக்கிறது என்றால், அது அவரது மகோன்னதப் பணிக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கலாம். ஆனால், அவரது மரணம் உலகின் பல மூலைகளில் ஆயுத நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு பேரிழப்பாகும். புலனாய்வு ஊடககாரர்களுக்கும் இந்த வீர மங்கையின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்புத்தான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -