சவூதி அரேபியாவின் புதிய இளவரசராக மன்னர் சல்மானின் மகனான 31 வயதுடைய முஹம்மத் பின் சல்மான் உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். முன்னர் இளவரசராக இருந்த முஹம்மத் பின் நயீப் விலக்கப்பட்டு புதிய இளவரசர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சவூதி அரேபியாவின் அடுத்த மன்னர் தயார் என்பதற்கான ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் முஹம்மத் பின் சல்மான் சவூதி அரேபியாவின் பிரதி பிரதம மந்திரியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் தனது பொறுப்புகளை கடமையேற்கவிருக்கிறார்.
முன்னதாக முஹம்மத் பின் சல்மானை இளவரசராக தெரிவு செய்வதற்கு நடந்த வாக்கெடுப்பில் சவூதி அரேபியாவின் அரச உயர் சபையில் அங்கம் வகிக்கும் 43 உறுப்பினர்களில் 31 உறுப்பினர்கள் முஹம்மத் பின் சல்மானுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம்.
வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்றிருக்கும் இந்த இளவரச தெரிவானது எதிர்காலத்தில் முரண்பாடுகளை சுமுகமான முறையில் தீர்த்துக்கொள்வதற்கு ஒரு வழிகோலாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது,
அத்துடன் எதிர்கால சவூதி அரேபியாவின் தலைமைத்துவத்தை இளைஞர்களின் கைகளில் ஒப்படைத்து ஆட்சியையும் நாட்டையும் ஒரு புதிய வழியில் இட்டு செல்ல எதிர்பார்க்க படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய சவூதி அரேபிய சனத்தொகையில் 25% க்கு மேற்பட்டவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த தெரிவின் மூலம் இளைஞர்களின் ஆதரவு முஹம்மத் பின் சல்மானுக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. எது எப்படியாயினும் விரைவில் சவூதிக்கு புதிய மன்னர் ஒருவர் தயார் என்பது வெகுவாக எதிர்பார்க்கப்படுகின்றது.
Razana Manaf-