162 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்த ஜெட் எயார்வேஸ் விமானத்தில் இருந்த ஒரு பெண்ணிற்கு எதிர்பாராதவிதமாக முற்கூட்டியே பிரசவ வலி ஏற்பட்டது. அதனால் அந்த விமானம் அவசர அவசரமாக மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது.
மும்பைக்கு விமானம் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் விமானப் பணியாளர்களும் விமானத்தில் இருந்த வில்சன் என்ற டாக்டரும் சேர்ந்து அப்பெண்ணிற்கு சிகிச்சைகளை வழங்கினர்.
சுமார் 35,000 அடியில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அப்பெண்ணிற்கு அழகிய ஒரு குழந்தை பிறந்தது; விமானம் தரையிறங்கியதும் தாயும் குழந்தையும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் பத்திரமாக அனுமதிக்கப்பட்டனர்.
தங்களது ஜெட் எயார்வேஸ் விமான சேவையின் வரலாற்றில் விமானம் பறக்கும் போது முதன் முதலாகப் பிறந்த குழந்தை என்பதால் அந்தக் குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் ஜெட் எயார்வேஸ் விமானத்தில் இலவசமாகப் பயணம் செல்லலாம் என ஜெட் எயார்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.