சம்பிக்கவின் கொந்தராத்து ஞானசார தேரரை மைத்திரி பாதுக்காக்கின்றார்..?

பொது பல சேனா அமைப்பை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவே பாதுகாப்பதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரது ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

இன்று பொது பல சேனா விவகாத்தில் நடந்து கொண்டிருக்கும் விடயங்களை பார்க்கின்ற போது ஞானசார தேரரின் பின்னால் ஜனாதிபதி மைத்திரி உள்ளார் என்ற அச்சமே மேலோங்கி காணப்படுகிறது. அவ்வாறானதொரு மிகப் பெரும் சக்தியின் பின்னணி இல்லாமல் இந்தளவு ஞானசார தேரர் ஆட்டம் போடவும் முடியாது. இத்தனை எதிர்ப்புக்களை மீறி அவருக்கு சட்ட சலுகை கிடைக்கவும் முடியாது.

தற்போதைய ஜனாதிபதியின் வெற்றியில் ஊழல் எதிர்ப்பு முன்னணியின் பங்கு அளப்பரியதாக இருந்தது. அதன் தலைவர் வலப்பனே சுமங்கள தேரர் ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசகர் போன்றே செயற்படுகிறார். இவ்வாறானவர்களின் ஆலோசனை கேட்டே ஜனாதிபதி மைத்திரி இயங்குவதான கதைகளும் உள்ளன. அவர் ஞானசார தேரர் நீதி மன்றில் ஆஜரான நேரம் முன்னின்று அவருடன் வந்திருந்தார். இவ் விடயமானது ஞானசார தேரரின் பின்னால் மைத்திரி இருக்கலாம் என்ற விடயத்தை புடம் போட்டுக் காட்டுகிறது.

ஞானசார தேரரை நான்கு குழுக்கள் அமைத்து பல இடங்களில் பொலிசார் தேடி இருந்தனர். இவர் இருக்கலாமென சந்தேகப்பட்ட இடங்களில் சு.காவின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் வீடே பிரதானமாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இதனை முக்கிய அரசியல் வாதிகள் கூறியதாகவே செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த செய்தி தொடர்பில் இதுவரை எந்த விதமான மறுப்பும் வரவில்லை.

பொதுவாக பொது பல சேனாவை இயக்குபவர்கள் விடயத்தில் அமைச்சர் சம்பிக்க போன்ற சிலர்களின் நாமம் பயன்படுவது வழமை. இவ் விடயத்தில் சு.காவின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் நாமம் பயன்படுவது இதுவே முதற் தடவை எனலாம். நெருப்பில்லாமல் புகை வருமா? இது உண்மையான செய்தியாக இருக்க வேண்டும் என்பதே பலரது சந்தேகமாக இருந்தது.

இது போன்று மஹியங்கனை சு.காவின் அமைப்பாளராக பொது பல சேனா அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இது ஜனாதிபதியின் அங்கீகாரம் இல்லாமல் நடக்க சிறிதும் சாத்தியமில்லை. இவ் விடயமானது ஜனாதிபதி மைத்திரி பொது பல சேனா அமைப்புடன் மிக நெருக்கமான தொடர்பில் உள்ளதை அறிந்து கொள்ளச் செய்கிறது.

இப்படி பல விடயங்களை ஆராய்ந்து பார்க்கின்ற போது பொது பல சேனாவின் பின்னணியில் ஜனாதிபதி மைத்திரி இருக்க வேண்டும் என்ற அச்சமே மேலோங்கி காணப்படுகிறது. எமது ஆட்சியில் பொது பல சேனாவுக்கு சம்பிக்கவே ஆதரவு வழங்கி வந்தார். இப்போது அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தல் கனவில் இருப்பதால் இந்த விடயத்தில் நேரடியாக இறங்காமல் ஜனாதிக்கு கொந்தராத்து வழங்கி இருக்கலாம் என அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -