நல்லா ஜோக் அடிக்கிறார் அமைச்சர் ராஜித..!

டந்த மஹிந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக ராஜித சேனாரத்ன அவர்கள் இருந்தாலும், அலுத்கம வேருவல போன்ற இடங்களில் நடந்த இனவாத வன்செயல்களை கடுமையாக விமர்சித்திருந்தார். ஆதே ராஜித சேனாரத்ன அவர்கள் அலுத்கம வன்செயல் நடந்து முடிந்து ஆறுமாதத்துக்கு பின் வந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக களம் இறங்கி வெற்றியும் கண்டவர்.

தான் கொண்டுவந்த நல்லாட்சியில் முக்கிய அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு நல்லரசாங்கத்தின் முக்கி புள்ளியாகவும் இருந்து வருகின்ற இவர், மஹிந்த ராஜபக்ஸவையும் அவரது குடும்பத்தையும் பல வழிகளிலும் குற்றம்சாட்டி கடுமையாக சாடியும் வருகின்றவராவார். மஹிந்தவை எப்படியாவது கூண்டில் அடைத்துவிட வேண்டும் என்று பல வழிகளிலும் முயற்சித்து வந்த இவர் அலுத்கம வேருவல பிரச்சினையில் இனகலவரத்தை உண்டுபண்ணிய பொதுபலசேனாவுக்கு பின்னால் மஹிந்தவும் அவரது தம்பியான கோத்தாபாயவும் இருப்பதாக பகிரங்கமாகவே குற்றம்சாட்டி வரும் ஒருவராவார்.

அப்படி குற்றம் சாட்டிவரும் அவர்கள் மஹிந்தவை அதற்குள் மாட்டவைப்பதற்கு இது ஒரு ஆதாரமாக இருக்கின்றபடியால் அலுத்கம பிரச்சினையை விசாரணைக்கு எடுத்து அதிலே மஹிந்தவையும், அவர் தம்பியான கோத்தாபாயவையும் அவர்களுக்கு துணைபோன பொதுபலசேனா அமைப்பினரையும் குற்றவாளியாக கண்டு தண்டனை வழங்க முயற்சித்திருக்கலாம். ஆனால் வெறுமனே குற்றம் மட்டும் சாட்டிவிட்டு, அவர்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடும் இந்த பிரச்சினையை என்னவென்றும் பார்க்காமலும் அதற்கு நஷ்டஈட்டையாவது வழங்க முன்வராமலும், மஹிந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நஷ்டஈட்டு தொகையை கொடுக்க முன்வராமலும், அந்த விடயங்களை கிடப்பிலே போட்டுவிட்டனர். 

ஆனால் ஞாபகம் வரும்போதெல்லாம் முஸ்லிம்களை உசிப்பேத்துவதற்காக அலுத்கமை பிரச்சினையை பற்றி பேசிக்கொள்வார்கள். அதனை முஸ்லிம்களும் நம்பிக்கொண்டு மஹிந்ததான் இதற்கெல்லாம் காரணம் என்று என்னிக்கொள்வதோடு நிறுத்திக் கொள்வார்கள். இதுதான் முஸ்லிம்களின் நிலைப்பாடாகவும் இருந்தும் வருகின்றது.

சில தினங்களுக்கு முன்னர் வழமைபோல் ராஜிதசேனாரத்ன அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு மத்தியிலே வழமையான குண்டான மஹிந்த எதிர்ப்பு கோசத்தை முன்வைத்து பேசிக்கொண்டிருந்தார். கடந்த அரசாங்கத்தில்தான் இனவாத செயல்பாடுகள் ஆரம்பித்தன என்றும், அலுத்கம பிரச்சினையில்தான் பல கடைகள் எறிக்கப்பட்டன என்றும், எங்கள் ஆட்சியில் அப்படியொன்றும் பெரிதாக இனவாத செயல்பாடுகள் இல்லையென்றும், இந்த இனவாதிகளுக்கு பின்னால் முன்னய ஆட்சியாளர்கள்தான் இருக்கின்றார்கள் என்றும், அவர்கள் ஏன் அவர்களுடைய காலத்தில் அதனை விசாரித்து தீர்வு வழங்கவில்லை என்றும் கூறி தனது வழமையான புராணத்தை பாடி முடித்தபோது,

இதனை அவதானித்த ஒரு பத்திரிகையாளர் தரமான கேள்வியொன்றை ராஜிதவை நோக்கி முன்வைத்தார். அலுத்கம பிரச்சினை நடந்து ஆறு மாதங்களில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிட்டது, அவர்களுக்கு அதனை விசாரித்து தீர்வு வழங்க கால அவகாசம் போதாமல் இருந்திருக்கலாம், ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களையும் தாண்டிவிட்டீர்கள் அலுத்கம பிரச்சினைக்கு இன்னும் உங்களால் விசாரணை நடத்தப்படவில்லையே ஏன்? 

இதில் மஹிந்த தரப்பினர் சம்பந்தப்பட்டிருந்தால் நீங்கள் விசாரணை நடத்தி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கலாமே என்றும் கேள்வியை தொடுத்தபோது. அதற்கு வரலாற்று முக்கியத்துவமான பதில் ஒன்றை ராஜித சேனாரத்ன அவர்கள் வழங்கியிருந்தார், அது என்ன பதில் என்றால்....
" நான் தேடிப்பார்த்து சொல்லுகின்றேன்" 

இதுதான் அந்த பத்திரிகையாளருக்கு ராஜித அளித்த பதிலாகும்.

ஆகவே இவர்களின் நோக்கமெல்லாம் முஸ்லிம்களின் பிரச்சினைகளை விளையாட்டாக எடுத்துக்கொண்டு அவர்களுடைய அரசியல் தேவைக்காக பயன்படுத்துகின்றார்களே தவிர, உண்மையாக முஸ்லிம்களின் பிரச்சினையில் அவர்கள் ஆர்வம் செலுத்துவதை விரும்பவில்லை என்பதே உண்மையாகும். ஆகவே, இந்த இனவாதிகளுக்கு பின்னால் இருப்பவர்களும், அவர்களுக்கு ஊக்கமளிப்பவர்களும் , அவர்களை வைத்து தங்களுடைய காரியங்களை சாதிப்பவர்களும் யார் என்று முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள முயற்சிக்காதவரை, முஸ்லிம்களின் உணர்ச்சிகளை கண்டவன் நிண்டவன் எல்லாம் பயன்படுத்தி லாபம் அடைவதற்கு முயற்சிப்பார்கள் என்பதே உண்மையாகும்.
எம்எச்எம்.இப்றாஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -