மலையக வரலாற்றில் முதன் முறையாக பொருந்தோட்டப்பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் பாடசாலைக்கு வருகை தந்து நிகழ்வுகளில் கலந்து கொண்ட பெறுமை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களை சாரும் என மத்திய மாகாண தமிழ் கல்வி மற்றும் விவாசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் 125வது ஆண்டுவிழா அட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் 29.06.2017 அன்று காலை இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர், பரீட்சை காலப்பகுதியில் மத்தியமாகாண பாடசாலைகளில் அதிக கல்வி பெறுபேறுகளை வழங்கும் ஒரே கல்லூரி அட்டன் ஹைலண்ஸ் ஆகும்.
இந்த கல்லூரியின் எதிர்காலத்திற்கும் கல்வி வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முன்னால் அதிபர் பாடுபட்டதை போல புதிய அதிபரும் செயலாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஹைலண்ஸ் கல்லூரி பல்வேறு கல்விமான்களை உருவாக்கியுள்ளது.
எதிர்காலத்திலும் நல்ல பல கல்விமான்கள் உருவாக வேண்டும்.
ஜனாதிபதியின் வருகை எமக்கு பெருமையை தரும் அதேவேளையில் இந்த நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இருந்தபோதிலும் எமது அழைப்பை ஏற்று பெருந்தோட்டத்துறையை உள்வாங்கிய பாடசாலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வருகை தந்தமை அதிகளவிலான பெறுமையை தருகின்றது என்றார்.