க.கிஷாந்தன்-
ரொசல்ல பின்னோயா தோட்ட மக்கள் 29.06.2017 அன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இத்தோட்டத்தின் மக்கள் பயன்பாட்டில் இருந்த மயான பூமி கடந்த காலங்களில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தோட்ட நிர்வாகம் புதியதொரு மயான பூமிக்கான காணியை வழங்கியுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட காணி தனி நபர் ஒருவருக்கு சொந்தம் என குறித்த நபர் அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தோட்ட தொழிலாளர்கள் 29.06.2017 அன்று இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இத்தோட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த ஒருவரின் உடலத்தை தோட்ட நிர்வாகம் வழங்கிய புதிய மயான பூமியில் அடக்கம் செய்துள்ளனர். இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மேலும் ஒருவர் உயிரிழந்து அவரின் உடலத்தை அடக்கம் செய்வதற்காக குறித்த மயான பூமிக்கு கொண்டு செல்லப்பட்ட போது இந்த மயான பூமி தனக்கு சொந்தமான காணியாகும் என தெரிவித்து வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் அட்டன் பொலிஸ் நிலையத்தில் தனது முறைபாட்டில் குறித்த மயான பூமி அமைந்துள்ள இடம் தனதாகும் என அதற்கான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் மயான பூமிக்கான ஆவணங்கள் தோட்ட நிர்வாகத்திடம் இருக்க வேண்டும்.
குறித்த நபரின் முறைபாட்டை எற்ற அட்டன் பொலிஸார் விசாரணைக்கென அழைத்த தோட்ட மக்கிளடம் இத்தோட்டத்திற்கு சொந்தமான மயான பூமிக்கான காணி என்பதை தாங்கள் உறுதிசெய்யவும், தோட்ட நிர்வாகம் இக்காணிக்கான உறுதியை வழங்க வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த தனி நபர் ஆக்கிரமித்துள்ள இடம் தோட்ட மக்களுக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்ய தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.