ICC சம்பியன்ஸ் ட்ரொபி இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானை உற்சாகப்படுத்தியும் கோஷங்களை எழுப்பி, வெற்றியைப் பட்டாசு கொளுத்திக் கொண்டாடிய 15 பேர் இந்திய மத்தியப் பிரதேச மாநிலத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். பக்கத்து வீட்டுக்காரர்கள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட இந்தப் பதினைந்து பேர் மீதும் தேசத் துரோக வழக்குத் தொடரப்படுமெனத் தெரிய வருகிறது.
இந்திய குற்றவியல் சட்டங்களின் கீழ், தேசத் துரோக குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது. தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் தங்கள் கடவுச்சீட்டுகளை நீதிமன்றங்களில் ஒப்படைக்கவேண்டும், அவர்கள் அரசாங்க வேலை பெறும் தகுதியை இழப்பார்கள். மேலும், எப்போது அழைப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் அதுமட்டுமன்றி, வழக்கு சம்பந்தமான எல்லாக் கட்டணங்களையும் அவர்களே செலுத்தவேண்டும்.
நல்ல வேளை...இங்கிலாந்தில் இந்தச் சட்டம் அமுலாகியிருந்தால், அங்கு பிரஜாவுரிமை பெற்றிருக்கும் அத்தனை இந்தியர்களையும் சிறையில் தள்ளி, பின்னர் நாடு கடத்தும் நிலைமை ஏற்பட்டிருக்கும்.