வடக்கில் உடைந்து போன மாகாண சபை மீண்டும் இணையுமா..?

2013 ஆண்டு நடைபெற்ற தேர்தலின் அடிப்படையாக உதயமான வடக்கு மாகாண சபை கைதடி பகுதியில் சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன உள்ளிட்ட 38 உறுப்பினர்களுடன் இயங்கி வந்தது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவதுடன் புதிய முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவதும் நீதியரசர் விக்னேஸ்வரன் பதவியில் இருந்து அகற்றுவதும் என்கின்ற விடயங்கள் தற்போது வட புல அரசியலில் பேசும் பொருளாக வெளிவந்துள்ளது.

இதில் தற்போதைய முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்புவது என்றும் புதிய முதலமைச்சராக தற்போதைய அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அவர்களை நியமிப்பது தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது. அத்துடன் இது தவறின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் பெயரும் முதலமைச்சர் பதவிக்காக முன்மொழிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலைமையில் தான் ஆளும் கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையாக 15 உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்கட்சியின் சில உறுப்பினர்கள் உள்ளடங்களாக முதலமைச்சருக்கு எதிராகவும் ஏனைய ஆளுங்கட்சி 14 உறுப்பினர்களுடன் சில எதிர்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு ஆதரவாகவும் ஏட்டிக்கு போட்டியாக ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

எதிர்வரும் ஜுன் மாதம் 22 இடம்பெறவுள்ள சபை அமர்வில் பெரும்பான்மையை நிரூபித்து தற்போதைய முதலமைச்சரை மீளவும் கொண்டு வர முயற்சிக்க ஒரு குழுவும் மற்றுமொரு குழு தற்போதைய முதல்வரை அகற்றுவது அதனுடன் புதிய ஆளும் கட்சி தலைவர் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது என்ற நிலைப்பாட்டில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி ஊடக சந்திப்புக்கள் இவ்விரு தரப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தென்னிந்திய அரசியலாகவும் மாற்றமடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்பாடு சமரசத்திற்கான நடவடிக்கைகள் அதற்காகான வாய்ப்புக்கள் மேற்கூறப்பட்ட செயற்பாடுகளினால் இல்லாமல் சென்று விட்டது என கூறத் தோன்றுகின்றது. எனினும் எஞ்சியுள்ள ஒன்றரை வருட காலப் பகுதியிலும் வட மாகாண சபை நெருக்கடியான சூழலுக்குச் சுமூகமானதொரு தீர்வு காண வேண்டுமெனில் தற்போதைய முதலமைச்சரே பதவியில் நீடிக்க வேண்டும் என இன்னொரு தரப்பும் தமிழரசுக் கட்சி முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை திரும்பப் பெறாவிட்டால் பாராளுமன்றத்திலும் பங்காளிக்கட்சிகள் தனித்து இயங்குவதுகுறித்து பேசி வருவதாக தெரியவருவதாக தெரிய வந்துள்ளது.தற்போது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாணமுதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் தமிழரசுக்கட்சி அரச கட்சிகளுடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக தன்னிச்சையாகநம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளமையே இவ்வாறான பிரச்சினை தோன்ற காரணமாக அமைந்துள்ளது.

இந்த வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஈபிஆர்எல்எப் ரெலோ புளொட் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளதுடன் வடமாகாண முதலமைச்சருக்குதமது ஆதரவையும் வழங்கியுள்ளன.பங்காளிக்கட்சிகள் தனித்து இயங்க முடிவு செய்ய உள்ள காரணத்தினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நெருக்கடியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையில் ஜனாதிபதியை சந்திக்க சென்ற ஆளுநர் ரெஜினோர் குரேயை வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையில் மத்திய அரசாங்கம் தலையிட விரும்பவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன் அதனை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனே பார்த்துக்கொள்ளட்டும் என கூறியுள்ளார்.

அத்துடன் ஊழலுக்கு எதிராக செயற்பட்டு வரும் நல்லாட்சி அரசில் ஊழல் தொடர்பான வடக்கு முதலமைச்சரின் விடயத்தில் தலையிடுவது பொறுத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த பிரச்சினைகள் வடக்கு மாகாண சபையில் நடைபெற காரணம் என்ன என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

நடந்தது என்ன?
அமைச்சர்களைப் பதவி நீக்க விசாரணைக்குழு பரிந்துரை வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட் டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன கூட்டுறவுத்துறை மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலக வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் உட்பட 5 அமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர். அவர்கள் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சொந்தக் கட்சியினராலேயே முன்வைக்கப் பட்டு வந்தன. அது தீவிரம் பெற்று விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை அடுத்து அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சுயாதீனமான குழு ஒன்றை நியமிக்கின்றேன் என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன் எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் அந்த விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தக் குழு செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி நியமிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பணியை ஆரம்பித்தது. அதன் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

விசாரணை அறிக்கை 82 பக்கங்களைக் கொண்டுள்ளது. முழுமையாகத் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணை விதிமுறை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் கண்டறிவுகள் பரிந்துரைகள் அல்லது விதப்புரைகள் நன்றியுரை என்ற கட்டமைப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பதவி பறிபோகுமா ? விசேட அமர்வாக கூடிய சபை

வடமாகாணசபை அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்ற சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாணசபையின் விசேட அமர்வு ஜுன் 6 இல் 
வடமாகாணசபையின் 94ம் அமர்வாக மாகாணசபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது .

இதில் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில்

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது நெருங்கிய உறவினர் ஒருவருடை ய மரண சடங்கிற்காக சென்றிருக்கிறார். இந்நிலையில் இன்றைய தினம் மேற்படி விசாரணை குழுவின் அறிக்கை சபையில் எடுத்து கொள்ளப்படவிருந்தது. ஆனால் மேற்படி விசாரணை குழு வடமாகாணசபையின் பிரேரணை அல்ல. அது முதலமைச்சருடைய பிரேரணையாகும். எனவே அந்த விசாரணை குழுவின் அறிக்கையை சபைக்கு கொண்டுவருவதற்கு உரிமை மற்றும் கடமை முதலமைச்சருக்கே உள்ளது. எனவே முதலமைச்சர் ஜுன் 7 மாகாணசபைக்கு கூறுவார். எனவே இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சருடன் பேசி இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளேன். எனவே குறித்த விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பாக ஆராய ஜுன் 7 விசேட அமர்வு நடைபெறும் என்றார்.

தமிழரசுக்கட்சியின் சதிவலை – ஐங்கரநேசன் வெளியே – குருகுலராசா உள்ளே வடமாகாண அமைச்சர்கள் விடயத்தில் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனை பதவியிலிருந்து அகற்றிவிட்டு கல்வி அமைச்சர் குருகுலராஜாவை காப்பாற்றும் நோக்கில் தமிழரசு கட்சி மும்முரமாக செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மும்முரமான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குருகுலராஜாவைக் காப்பாற்றும் கைங்கரியங்களில் கடுமையாக ஈடுபட்டு வந்தார். கல்வி அமைச்சரிற்கு எதிரான நடவடிக்கைகளினால் சீற்றமடைந்துள்ள அவர் இது தொடர்பில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவையிடம் காட்டமான கருத்துக்கள் சிலவற்றினை முன்வைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

அதே நேரம் பிரபல வர்த்தகரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஐங்கரநேசனை பதவிநீக்கம் செய்யும் முனைப்பில் காய்களை நகர்த்திவருவதாக தெரியவருகின்றது. அதற்காக அவர் தனது கட்சி ஊடகத்தை கடுமையாகப் பயன்படுத்தி ஐங்கரநேசனை இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றமையும் தெரிந்ததே. இவருக்குப் பக்கபலமாக சுமந்திரன் ஆதரவு அணியினரும் ஐங்கரசேனை இலக்குவைத்து அவரை வெளியகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மாகாணசபையைப் பெறுத்தவரை நான்கு அமைச்சர்களும் மோசடிகளில் ஈடுபட்டதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல எனக் கூறப்படுகின்றபோதும் ஐங்கரநேசன் முதலமைச்சருக்கு நெருக்கமாகச் செயற்பட்டமையே அவரை பழிவாங்குவதனூடாக முதலமைச்சரை ஓரங்கட்டும் வேலைத்திட்டமே அமைச்சர்களிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களும் தற்போதுவரையான நடவடிக்கைகளும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சகல அமைச்சுக்களின் மீதும் முறைப்படியான நீதியான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டால் நான்கு அமைச்சர்களும் பதவி இழக்கவேண்டும் எனக் கூறப்படுகின்றது

கல்வி அமைச்சர் த.குருகுலராசா மீதான குற்றச்சாட்டு

கல்வி அமைச்சர் த.குருகுலராசா கல்விச் சேவைப் பின்புலத்திலிருந்து வந்தவர். வடக்கின் கல்வி வீழ்ச்சியடைந்திருந்தது. இவ்வாறான சூழலில் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதன் பின்னரும் கல்விப் புலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அமைச்சர் குருகுலராசா அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். கல்வி அமைச்சின் செயலாலரின் அதிகாரத்தை அமைச்சர் தனது கையில் எடுத்துள்ளார். இடமாற்றங்களின் போது அரசியல் செல்வாக்குச் செலுத்தப்பட்டுள்ளது. செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை முறையற்ற விதத்தில் அமைச்சர் பயன்படுத்த வகை செய்யும் அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டிருக்கின்றது. 

இதில் செயலாளரும் கையெழுத்திட்டு உடந்தையாக இருந்திருகிறார். இப்படியானதொரு அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டபோது தலைமைச் செயலாளரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்துள்ளார். வடக்கு மாகாண சபை திறனற்றுச் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டு மக்களால் முன்வைக்கப்பட்டு வருவதை ஆமோதிப்பது போன்று இது உள்ளது.
மிக முக்கியமாகஇ கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைச் சிறுமி ஒருவர் பாடசாலை அதிபரால் பாலியல் வதைக்கு உட்படுத்தப்பட்டார். சம்பவம் குறித்துக் குரல் எழுப்பிய பாடசாலை ஆசிரியரை கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருடன் இணைந்து கல்வி அமைச்சர் இடமாற்றம் செய்துள்ளார். இது மிக மோசமான மன்னிக்க முடியாத குற்றம்.

எனவே கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உடனடியாகத் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும். அத்துடன் கல்வி அமைச்சின் செயலாலரும் அந்தப் பதவிலியிருந்து விலக வேண்டும்.

விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டு

விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. ஆளும் கட்சி உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன், தன்னுடன் வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசாவுடன் விசாரணைக் குழுவிடம் முன்னிலையாகியிருந்தனர். அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம், தவராசா குறுக்கு விசாரணை செய்திருந்தார். அதிகார வரம்பு மீறல், முறைகேடுகள், நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் இருக்கின்ற நிலையில், இளையவரான ம.பற்றிக் டிறைஞ்சன் இவரது அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டார். இது இவர் செய்கின்ற மோசடியான நடவடிக்கைகளுக்கு இணங்கிச் செயற்படுவதற்காகவே மேற்கொள்ளப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மரம் நடுகை, பாதீனிய ஒழிப்பு, நீர் ஆய்வு விடயங்களை சுற்றாடல் அமைச்சர் என்ற கோதாவில் முன்னெடுத்துள்ளார். சுற்றுச்சூழல் விடயம், 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒருங்கியைவு நிரலில் உள்ளது. இவற்றை கொழும்பு அரசுடன் சேர்ந்து திணைக்களம் உருவாக்கி மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படியல்லாமல் அமைச்சரை முன்னிலைப்படுத்தியே இவரது செயற்திட்டங்கள் அமைந்துள்ளன. இத்தகைய செயற்றிட்டங்களின் தொடக்க நிகழ்வுகளுக்கு முதலமைச்சர் அழைக்கப்பட்டிருக்கின்றார். அவரே இவற்றை இயக்குவதான , பின்னணியில் இருப்பதான மாயை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டுள்ளார். அதனை வைத்து தனது கைங்கரியங்களை நிறைவேற்றியுள்ளார்.

இவரது அமைச்சுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பவுசர்களை, உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். விவசாய கிணறு புனரமைப்பு, புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டங்களில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராகக் கடமையாற்றிய திருமதி மதுமதி வசந்தகுமார், இவரது அழுத்தங்கள் காரணமாகவே மாகாண சபை சேவையை விட்டு வெளியேறினார் என்று விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. வடமராட்சி கிழக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவரை பதவி நீக்கம் செய்தமை உள்ளிட்ட விடயங்களில் அமைச்சர் நேரடியாக தலையீடு செய்து அழுத்தங்களை வழங்கியுள்ளார்.

இதேபோன்று யாழ்க்கோவிலும் தலையீடு செய்துள்ளார். இதனால் விசாரணைக் குழு விசனமடைகின்றது. பிந்திய செய்தியாக, யாழ்கோ பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமனத்திலும் அழுத்தம் கொடுத்துள்ளார் என்று அறிகின்றோம். திணைக்கள அதிகாரிகள் மிரட்டப்பட்டு சில நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர் முன்னெடுத்த தன்னை முதன்மைப்படுத்திய செயற்திட்டங்களால் மாகாண சபை நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பொ.ஐங்கரநேசனும், அவரது செயலாளருமான பற்றிக் டிறைஞ்சன் ஆகியோர் பதவி விலக வேண்டும். வடக்கு மாகாண சபையை வினைத்திறனாக கொண்டு நடத்துவதற்கு எமது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய அமைச்சர்களது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை

சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை. இதனால் அவர் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப் படுகின்றார். அமைச்சர் பா.டெனீஸ்வரன் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தியவர்கள், விசாரணைக்கு சமுகமளிக்கவில்லை. எனினும் குற்றச் சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டன. ஆதாரங்கள் இல்லாததால் அவரும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்படுகின்றார். இதற்கிடையில் வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள எருமைத்தீவில் இன்று நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்ச்சியில் உரையாற்றியிருக்கும் அமைச்சர் ஐங்கரநேசன் மாகாணசபைகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயங்களில் அதிகாரம் தரப்படவில்லை. அந்தவகையில்,மத்திய அரசுக்குரிய சூழல் பாதுகாப்பு விடயங்களில் மாகாண அமைச்சு தலையிட முடியாது என்று சொல்லப்படுகிறது. எமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், இயற்கை வளங்களைப் பேணுவதில் அதிகார வரம்பை மீறுவது அல்லது அதிகாரங்கள் இல்லாத விடயங்களில் தலையிடுவது சட்டத்தின் பார்வையில் குற்றமாக இருந்தாலும் அரசியல்வாதிகளாக அவற்றைச் செய்வது தவிர்க்கமுடியாது என்று தெரிவித்திருந்தார்.

விசாரணைக் குழு மீது நம்பிக்கையில்லை

தமக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட விசாரணைக் குழுவின் நம்பகத்தன்மை மீது வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு மாகாண சபையின் ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் எதிராக வாதாடும் ஒருவர் அதனோடு தொடர்புடைய விசாரணைக் குழுவின் நீதிபதியாக இருந்து தீர்ப்பளிப்பதை தான் முரண்பாடாக பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை வடக்கு மாகாண சபையில் முதலமைச்சரால் சமர்பிக்கப்பட்டபின் அதற்கு பதிலளித்து உரையாற்றியபோதே விவசாய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட முன்பு அது தொடர்பில் தகவல்கள் வெளியில் வந்து ஊகங்களும் திரிவுபடுத்தப்பட்ட செய்திகளும் வருவது எம்மைப் பாதிக்கும். நாங்கள் கூறிய விடையங்கள் பல அறிக்கையில் வெளியிடப்படவில்லை. கூறாத பல விடையங்கள் வெளிவந்திருக்கின்றன. பல விடையங்கள் பிழையானவை. சபை உறுப்பினர்கள் அனைவரது கைகளிற்கும் அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான விளக்கம் அளிக்கின்றேன் என்றார் அவர்.

விவசாய அமைச்சர் முதலாமிடம்

வடக்கு மாகாண அமைச்சர்களிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் விவசாய அமைச்சரிற்கு எதிராக அதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. விவசாய அமைச்சருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களும், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்துக் எதிராக 5 குற்றச்சாட்டுக்களும், கல்வி அமைச்சர் குருகுலராஜாவிற்கு எதிராக 9 குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் போக்குவரத்து மற்றும் சுகாதார அமைச்சர்களிற்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள் சிலர் விசாரணையின் போது சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி ஒளிபரப்பிற்கு தடை – அச்சு ஊடகங்கள் பாவம் – கண்ணீர் வடித்த சி.வி.கே

ஜுன் 14 ஆம் திகதி நடைபெறும் விசேட அமர்வில் ஊடங்கள் அமர்வினை இலத்திரணியல் ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதை தடை செய்வதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டிருந்தார். இலத்திரனியல் ஊடகங்களை நேரடி ஒளிபரப்பிற்கு அனுமதித்தால் உடனடியாகவே தகவல்களை வெளிக்கொணர்ந்துவிடும் இதனால் இங்கு அமர்விற்கு செய்தி எடுத்துச் செல்லும் அச்சு ஊடகங்கள் பாவம் என அவர் குறிப்பிட்டது கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை விசாரணை அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படமுன்பு ஊடகங்களால் அமைச்சர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது என இது தொடர்பில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் அரசின் ஏஜன்ட் – சி.வி.கேயின் கருத்தால் சர்ச்சை

கிழக்கு மாகாண முதலமைச்சர் அரசாங்கத்தின் ஆள். அவர் சட்டம் ஒழுங்கு தொடர்பான விடயங்களைக் கையாள அரசாங்கம் அனுமதிக்கிறது. வடக்கில் நிலமை அவ்வாறில்லை. வடக்கு முதல்வருக்கு அவ்வாறு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை என அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் சந்தர்ப்பங்களில் அவற்றிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றஞ்சாட்டியிருந்தார். கிழக்கு மாகாண முதல்வர் இவ்வாறன விடயங்களில் உடன் நடவடிக்கை எடுக்கிறார். அவர் பள்ளிவாயில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்டவற்றின் போது சிறப்பாக செயல்பட்டதை காண முடிகின்றது. என கூறினார். அதற்குப் பதிலளித்து உரையாற்றியபோதே அவைத்தலைவர் மேற்குறித்தவாறு கூறியுள்ளார்.

வடக்கு அமைச்சர்கள் நால்வரும் அவுட் – வீட்டிற்கு அனுப்பினார் முதல்வர்
ஐங்கரநேசன், குருகுலராஜா பதவி விலகல்- டெனிஸ்வரன், சத்தியலிங்கத்துக்கு கட்டாய விடுமுறை– புதிய விசாரணையின் பின் அவர்களும் வெளியேற்றம்.

வடமாகாண சபையின் அமைச்சர்கள் நால்வரும் பதவி விலகுமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று வடமாகாண சபையில் அறிவித்துள்ளார். ஊழல், அதிகார துஷ்பிரயோக விசாரணைக் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்களின் நிலை பற்றி இன்று வடமாகாண சபையில் விவாதிக்கப்பட்டது. அதன்போதே இந்த அதிரடி அறிவிப்பினை முதலமைச்சர் வெளியிட்டார். இந்த நான்கு அமைச்சர்களில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா ஆகிய இருவரும் நாளை நண்பகலுக்கு முன்னர் தாமாகப் பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் கோரியுள்ளார். அத்துடன் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் மீது உடனடியாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால், அவர்கள் இருவரும் ஒரு மாத விடுமுறைக் கடிதத்தை நாளை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையில் இருக்கும் போது குறித்த இரு அமைச்சர்களோ அல்லது அவர்களின் பிரத்தியேக ஆளணியினரோ அந்தந்த அமைச்சு தொடர்பான விடயங்களில் தலையிடக்கூடாதெனவும் முதலமைச்சர் கண்டிப்பாக கூறியுள்ளார். பதவி விலகப்போகும் மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்படும் நான்கு அமைச்சர்களின் பொறுப்புகளையும் இனிமேல் தானே கவனித்துக் கொள்ளப்போவதாகவும், அமைச்சின் செயலாளர்கள் தனக்கே பொறுப்புக் கூற வேண்டுமெனவும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதேவேளை நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாக பதவி நீக்கம் செய்ய தமிழரசுக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தன்னுடைய மதிநுட்பத்தால் நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாகப் பதவியில் இருந்து வெளியேற்றாமல், கட்டம் கட்டமாக அவர்களின் பதவியை முதலமைச்சர் பறித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

முதலமைச்சரது உரையின் முழுவடிவம்

கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே, அமைச்சர்களாகிய நாம் உரிய பயிற்சியுடன் இந்தப் பதவிக்கு வரவில்லை. சட்டங்கள் எமக்குச் சாதகமாக இருந்ததில்லை. அரசியல் சூழல் எமக்குச் சாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் எம் மக்களின் எதிர்பார்ப்பு எல்லை கடந்திருக்கின்றது. எம்மவர் எமக்குப் பெற்றுத் தருவார்கள் என்ற திடநம்பிக்கை அவர்களுக்குண்டு. அதை நாம் சிதைத்தலாகாது. எம் அமைச்சர்கள் குற்றங்கள் இழைத்தார்களா இல்லையா என்பது முக்கியமில்லை. சட்டப்படி அவை குற்றங்களா இல்லையா என்பதும் முக்கியமில்லை. அவை தண்டணைக்கு உட்படுத்தப்படக் கூடிய குற்றங்களா அல்லது வெறும் தவறுகளா என்பது கூட முக்கியமல்ல.

அமைச்சர்களின் நடவடிக்கைகள் என்று கூறப்பட்டுள்ளவை மக்கள் மனதில் எந்த விதமான எண்ணங்களை, மனத்திருப்தியின்மையை, வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன என்பன சிந்திக்கப்பாலன. அந்த வகையில் குறையோ நிறையோ, சரியோ பிழையோ, ஒரு செயல்முறையின் ஊடாக நாங்கள் வந்துள்ளோம். “ஒருவர் மேல்த்தான் குற்றம், முதலமைச்சர் மற்றையோரையும் தேவையில்லாது உள்ளடக்கியுள்ளார்” என்ற குற்றச்சாட்டை சிலர் முன்வைத்தார்கள். விசாரணை அறிக்கை அதற்கு விடை பகர்ந்திருக்கின்றது. இவ்வாறான விடயங்களில் அரசியல் கலக்கப்பட்டமை வருத்தத்திற்குரியது. இது சம்பந்தமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். விசாரணைக்குழு முன் சமர்ப்பித்த குற்றச் சாட்டுக்களுக்கு மேலதிகமாக முறைப்பாட்டாளர்கள் வராமையால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே உரிய விசாரணைகள் உண்மையைக் கொண்டு வருவன. ஆனால் முறைப்பாட்டாளர் வராததால் விடுவிக்கப்பட்டவர்கள் குற்றம் செய்யாத நிரபராதிகள் என்று கூறித் திரிவது மன வருத்தத்திற்குரியது.
அவ்விரு அமைச்சர்கள் சம்பந்தமாக குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பது முழுமையான உண்மை அல்ல. 

முறைப்பாட்டாளர்கள் வராததால் அவர்கள் மீதான குற்றங்களைப் பரிசீலித்து முடிவுக்கு வர முடியாததாக இருந்தது என்பதே உண்மை. முறைப்பாட்டாளருள் ஒருவர் பகிரங்கமாகவே இம்மன்றில், தான் விசாரணைத் தினமன்று போக முடியாமைக்கான காரணங்களைக் கூறினார். மீண்டும் விசாரணை நடந்தால் தன்னால் தனது குற்றச்சாட்டுக்களை நிலை நாட்ட முடியும் என்றுங் கூறியுள்ளார். இரு அமைச்சர்களின் தன்நிலை விளக்கங்கள் எந்த அளவுக்கு மக்களின் நல்லெண்ணத்தை மீண்டும் நிலை நிறுத்துவன என்பது சர்ச்சைக்குரிய விடயம். ஆனால் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டிய பல விடயங்கள் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சம்பந்தமாக விசாரணைக் குழுவொன்றை மீள் நியமனம் செய்ய முடியாது. அவர்கள் பேரிலான மேலதிக விசாரணைகள் காலத்தை விரயமாக்கும் செயல்கள். எமக்கிருக்கும் மிகுதிக்காலம் சொற்பமே.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் கூறியிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்த நாம் எமது வேலைகளைத் துரிதமாகச் செய்ய எம்முள் ஒற்றுமை வேண்டும். சுயநலம் மேலிட்டால் பொதுநலம் மறந்து போய்விடும். சில அமைச்சர்கள் எம்முடன் ஒத்துழைக்காது பிற நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயல்ப்படுவது நன்கு புலனாகின்றது. அவர்களுக்கு மத்திய அரசாங்கமும் அங்குள்ள அமைச்சர்களும் கூடிய முக்கியத்துவம் பெற்று விட்டார்கள். அதனால் எம்மைத் தூ~pக்கவும் தயங்குகின்றார்கள் இல்லை. இது ஒற்றுமையை வளர்க்காது ஒத்துழைப்பின்மையையே வலியுறுத்தும். அமைச்சர்கள் ஐவரும் ஒருமித்து வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புடனும் முன் சென்றால்த்தான் மக்கள் பயன் அடைவார்கள். நாம் ஒருவரோடு ஒருவர் ஒத்துழையாது செயல்ப்படுவது எமது மக்களுக்கு நாம் செய்யுந் துரோகமாகும்.

எனினும் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டார்களோ இல்லையோ காணப்படுவார்களோ இல்லையோ இன்றைய நிலையில் அவர்கள் பதவியில் தொடர்ந்தால் எமது அமைச்சர்கள் மக்களின் ஏளனப் பார்வைக்கு ஆளாக வேண்டி வரும். அவர்களின் கீழ் பணிபுரியும் அலுவலர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். அதுதான் யதார்த்தம். நிர்வாக ரீதியான முறைகேடுகளும், ஒழுக்கவீனங்களும் நடைபெற்றுள்ளதாலும் ஒரு நேர்மையான கண்ணியமான நாணயமான நிர்வாகத்தை மக்கள் எதிர்பார்த்திருப்பதாலும் இந்த அறிக்கையில் உள்ள சில விடயங்களையும் மற்றும் வேறு காரணங்களையும் கவனத்தில் எடுத்து மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டிய கடப்பாடொன்று எனக்குள்ளது. முன்னர் சாட்சியங்கள் வராமையால் விடுவிக்கப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தாது அவர்களைத் தண்டிப்பது பொருத்தமாகாது.

இன்றைய இந்த நிலைமையை நான் ஏற்படுத்தவில்லை. இந்த மன்றின் உறுப்பினர்களே ஏற்படுத்தினார்கள். சில உறுப்பினர்கள் என்சார்பானவர் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு அமைச்சரை மட்டும் வெளியேற்ற முற்பட்டு அவர்களின் மதிப்புக்குரிய இன்னொருவரையும் பதவி இறக்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள். எமது வெளிப்படையான செயற்பாடுகள் சகலதையும் மக்கள் முன்னிலையில் எடுத்துச் சென்று விட்டன. இது எமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். குற்றங்கள் எனக் கூறப்பட்டவற்றை என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியிருந்தால் அவை பற்றி உரிய விசாரணை செய்து நடவடிக்கைகள் எடுத்திருப்பேன். சந்தி சிரிக்க மன்றில் எடுத்து பத்திரிகைகளில் விளாசித் தள்ளி அமர்க்களம் ஆக்கிவிட்டீர்கள். இப்பொழுது ஏன்தான் இவ்வாறு செய்தோம் என்று அல்லல் படுகின்றீர்கள். அமைச்சர்களின் மனங்களையும் புண்படுத்தியுள்ளீர்கள். இவ்வாறான புகார்கள் இனியாவது இரகசியமாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டால் உரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.

பன்டோராவின் பெட்டியைத் திறக்காதீர்கள் என்றார்கள். திறந்தார்கள். அத்துடன் வேண்டத் தகாத பலவும் வெளியே வந்துவிட்டன. அது போல் இது வரை நடைபெற்ற செயல்பாடுகள் யாவும் எம் எல்லோருக்கும் பாடமாக அமையட்டும். தனிப்பட்ட குரோதங்களுக்கும் பதவியாசைக்கும் பேராசைக்கும் எம்மை அடிமைப் படுத்திக் கொண்டால் வரக்கூடிய விளைவுகளுக்கு எங்கள் எல்லோரதும் இதுவரையிலான நடவடிக்கைகள் சாட்சியமாக அமைகின்றன. வேறெங்கோ இருப்பவரின் பதவி ஆசையானது எம்முள் சிலரை வழிநடத்திக் கொண்டிருக்கின்றதோ என்றும் எண்ண வேண்டியுள்ளது.

மக்கள் எமது வேலைகளைத் துரித கதியில் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள். அவற்றை நேர்மையுடனும் பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள். இந்த நிலைமையில் இம்மன்றின் 16 உறுப்பினர்கள் அமைச்சரவை மாற்றம் கோரி சென்ற வருடம் மார்ச் மாதம் ஒரு மனுச் செய்திருந்தார்கள். எந்தவித குறைகளும் கூறப்படாமல் எவ்வாறு அதனை நடைமுறைப்படுத்துவது என்று நான் அவர்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கத் தாமதித்தேன்.

ஆனால் முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சர் இல்லை என்ற விடயத்தைக் கருத்தில் எடுத்;திருந்தேன். அதன் பின்னர் தான் விசாரணைக்குழு அமைக்க வேண்டி வந்தது. அண்மையில் நான் அவர்களிடம் குறித்த கோரிக்கையை நினைவு படுத்தி அந்தக் கோரிக்கை இன்றும் வலுவானதா என்று அறிய முற்பட்டேன். அதில் இருந்து தெரிய வந்தவை அக் கோரிக்கை இன்றும் வலுவுடையது என்பதே. நான்கு உறுப்பினர்கள் மட்டும் எந்த விதமாற்றங்களும் இனித் தேவையில்லை என்று கூறியுள்ளார்கள். அதில் அரசியல் கலந்திருப்பதைக் காண்கின்றேன். எனவே எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று சென்ற வருடம் கேட்டவர்கள் இன்று ஒருவரையும் மாற்றத் தேவையில்லை என்கின்றார்கள். மாற்றக் கோரும் கோரிக்கை என்முன் கிடப்பில் இப்போது உள்ளது.

மற்றையவர்கள் போனால் முதலமைச்சரும் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை இப்பொழுது சிலர் மத்தியில் நடைமுறைச் செல்வாக்குப் பெற்று வருகின்றது. ஒரு முதலமைச்சரை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றார்கள். அமைச்சர்களை முதலமைச்சரே கட்சி வரையறைகளைப் பேணி மாவட்ட நலவுரித்துக்களைச் சிந்தையில் நிறுத்தி தேர்ந்தெடுக்கின்றார். அதற்கு சட்ட வலுவை ஆளுநர் அளிக்கின்றார். ஆளுநரால் தான்தோன்றித்தனமாக அமைச்சர்களை நியமிக்க முடியாது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சர், தான் சிபார்சு செய்த அமைச்சர்களை நீக்கி புதிய அமைச்சர்களை நியமிக்கக் கோரும் பொறுப்பை உடையவர் என்பதை இங்கு கூறி வைக்கின்றேன்.

அமைச்சர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நடைமுறை மாற்றம் ஒன்றை எமது உறுப்பினர்களும் மக்களும் விரும்புகின்றார்கள் போலத் தெரிகின்றது. இவற்றை எல்லாம் கவனத்திற்கெடுத்து செயற்படுவது எனது தார்மீகக் கடமையாகும். இதன் நிமித்தம் கௌரவ அமைச்சர்கள் திரு.குருகுலராஜா மற்றும் திரு.ஐங்கரநேசன் ஆகியோரைத் தாமாகவே தமது பதவிகளைத் தியாகம் பண்ணுமாறு வேண்டிக் கொள்கின்றேன். மற்றைய இரு அமைச்சர்களுக்கு எதிராக புதிய விசாரணையொன்று நடைபெறும்.

அவர்களுக்கு எதிராகக் கிடைத்திருக்கும் மேலதிக விடயங்களும் அவ்விசாரணையின் போது பரிசீலனை செய்யப்படுவன. விசாரணை முடிவடையும் வரை இயற்கை நீதியையும் நல்லாட்சி விழுமியங்களையும் கருதி இரு அமைச்சர்களும் விடுமுறையில் விலகி இருக்க வேண்டும். தமது அமைச்சு விடயங்களில் அவர்களோ அவர்களின் பிரத்தியேக ஆளணியினரோ பங்குபற்றல் ஆகாது. அவர்களின் அமைச்சுப் பொறுப்புக்களை நான் தற்காலிகமாக ஏற்றுக் கொள்கின்றேன். அவ் அமைச்சர்களின் செயலாளர்கள் எனக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

விசாரணையில் அவர்கள் விடுதலை அடைந்தால் திரும்பவும் பதவிகளில் தொடர்ந்து கடமையாற்றலாம். எனவே முதலிரு அமைச்சர்களின் இராஜினாமாக் கடிதங்களையும் மற்றைய இருவரின் ஒருமாதத்திற்கான விடுமுறைக் கடிதங்களையும் நாளை மதியத்திற்கிடையில் நான் எதிர்பார்க்கின்றேன். கூடிய விரைவில் புதிய விசாணைக்குழு நியமிக்கப்படும். வேண்டுமெனில் விடுமுறையில் உள்ள அமைச்சர்களின் விடுமுறைக் காலம் தேவைக்கேற்றபடி நீட்சி செய்யப்படும் என முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

5 நாள் அமர்விற்கு 20 இலட்சம் 

வடமாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினது செலவாக 3 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ள நிலையில் தொடர்பில் தாங்களும் விவாதிக்கவேண்டும் எனக் கூறி சபை அமர்வுகளை நடாத்திய மாகாண சபையினர் 20 இலட்சம் ரூபா நிதியை ஏப்பமிட்டது அம்பமாகியுள்ளது.வடமாகாண சபையின் இன்றைய அமர்வின்போது அது அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் வாயினாலேயே குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. அமைச்சர்கள்மீதான விசாரணைக்காக மூன்று இலட்சமும் விசாரணை குறித்த 5 விசேட அமர்வுக்க 20 இலட்சங்களும் செலவிடப்பட்டுள்ளன.

வடமாகாண அமைச்சர்கள் மூவர் உட்பட 16 உறுப்பினர்கள் ஆளூநருடன் சந்திப்பு.

முதலமைச்சருக்கு எதிரான பிரேரணை கையளிப்பு

வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வடமாகாண ஆளூநரிடம் ஆளும் கட்சியினர் ஜுன் 14 விசேட அமர்வின் பின்னர் கையளித்துள்ளனர். அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலமையில் வடமாகாண ஆளுநரை சந்தித்த மாகாணசபை உறுப்பினர்கள் 16 பேர் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளித்துள்ளனர்.அதேவேளை முதலமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 22 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர் என தெரியவருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா உட்பட ஈபிடிபி மாகாணசபை உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணையில் கையெழுத்திடவில்லை. வடமாகாணசபை குறைந்தபட்சமாவது இயங்குவதற்கு ஈபிடிபி இன் ஒத்துழைப்பே முதலமைச்சருக்கு கை கொடுத்து வந்துள்ளது.வடக்கு மாகாண முதலமைச்சரை மாற்றக் கோரி ஜுன் (14) ஆளுநர் ரெஜினால்ட் குரேயிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது. அந்தவகையில் வட. மாகாண சபையின் ஆளும் தரப்பினை சேர்ந்த தமிழரசு கட்சியின் 15 உறுப்பினர்களும் ஏனைய கட்சிகளை சேர்ந்த 7 பேரும் மேற்படி முதலமைச்சருக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அதன்படி தமிழரசு கட்சியின் வடமராட்சி தேர்தல் தொகுதியின் உறுப்பினர்களான சுகிர்தன் சிவயோகன் தர்மலிங்கம் ஆகியோரும் தென்மராட்சி தொகுதியிலிருந்து சயந்தனும் கையெழுத்திட்டுள்ளனர். யாழ்ப்பாண தேர்தல் தொகுதியிலிருந்து ஆர்னல்ட் பரஞ்சோதி அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து அரியரத்தினம் பசுபதிபிள்ளை கல்வியமைச்சர் குருகுலராசா ஆகியோரும் மன்னார் மாவட்டத்திலிருந்து சிறாய்வா வவுனியா மாவட்டத்திலிருந்து சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கமலேஸ்வரன் ஆகியோரும் முதலமைச்சருக்கு எதிரான கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர்.

இதேவேளை ரெலோ கட்சியை சேர்ந்த மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஜவாகிர் ஜயதிலக ஆகியோரும் சுதந்திர கட்சியிலிருந்து அகிலதாஸ் மற்றும் போனஸ் ஆசனம் மூலம் தெரிவான அய்யூப் அஸ்மீன் ஆகியோரும் முதலமைச்சருக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளனர். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த றிப்கான் பதியுதீன் இச்சந்திப்பில் காணவில்லை. இதேவேளை உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில் பதவி மற்றும் பணக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் தவராசாவிற்கு அவைத் தலைவர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழரசுக் கட்சி சூழ்ச்சி – முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவருவதற்கான அறிவிப்பினை தமிழரசுக்கட்சி அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து வடமாகாண ஆளுநரிடம் இன்றிரவு கையளித்துள்ளனர். மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழரசுக்கட்சி சார்ந்தவர்களே முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு வடமாகாண ஆளுநரை சந்தித்து 22 பேரது கையொப்பமிட்ட கடிதத்தினை வழங்கியுள்ளனர். இந்த 22 பேரினில் அமைச்சர்களும், தமிழரசுக்கட்சியினரும் உள்ளடங்கியிருந்ததாக சொல்லபப்படுகின்றது. எனினும் ஆளுநரை சந்திப்பதில் 16 பேர் கொண்ட குழுவே பங்கெடுத்திருந்ததாக தெரியவருகின்றது.

மாகாண எதிர்க்கட்சித் தலைவருடன் அளுநர் இரவிரவாக மந்திராலோசனை

வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜிலோல்ட் கூரே நேற்று இரவு அவசரமாகச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கிறார். தமிழரசுக் கட்சி உறுப்பிரகள் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை நேற்றிரவு கையளித்துச் சென்றனர். அதன் பின்னராக உடனடியாக தன்னை வந்து சந்திக்குமாறு மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆளுநரிடமிருந்து அழைப்புவந்ததாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தான் கையெழுத்திடவில்லை என தெரிவித்த வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா எதிர்க்கட்சியைச் சேர்ந்த வேறு உறுப்பினர்கள் கையொப்பமிட்டார்களா என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் பதிலளித்தார்.

விக்கியைக் கவிழ்க்க ஐங்கரநேசனிடம் தூது சென்ற சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனிடம் சி.வி.கே அணியினர் தூதனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று நடைபெற்ற மாகாணசபை அமர்வில் நீங்களாக பதவி விலகியதாக இராஜினாமாக்கடிதத்தை சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதலமைச்சருக்கு எதிரான அணியில் இணைந்துகொள்ளுமாறு விவசாய அமைச்சருக்கு தூது அனுப்பப்பட்டதாக தெரியவருகின்றது. எனினும் இதனை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் உடனடியாகவே நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளைஞர்கள் ஆயிரமாய் ஒன்றுகூடினர் – கைதடியிலிருந்து நல்லூர் கோயில் வீதி வரை-ஜுன் 16

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முதலமைச்சருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தும் இளைஞர்கள் நேற்று ஒன்றுகூடினர். கைதடியிலுள்ள மாகணசபை முன் நூற்றுக்கணக்காய் கூடிய இளைஞர்கள் முதலமைச்சரிடம் தங்கள் ஆதரவை நேரில் தெரிவிப்பதற்காக வாகனங்களில் கைதடியிலிருந்து நல்லூர் கோவில் வீதி வரை திரண்டுவர அவர்களோடு பிறரும் வீதியெங்கும் இளைஞர்கள் அணிதிரண்டு முதலமைச்சர் இல்லத்திற்கு முன்னால் தங்கள் ஆரவுக் கோசங்களை எழுப்பினர். அதன்போது வெளியில் வந்த முதல்வர் ஆயிரக்கணக்காய் திரண்டுவந்த இளைஞர் கூட்டத்தைக் கண்டு விம்மலுடன் கண்ணீர் மல்கினார்.
என்றும் உங்களுடன் நானிருப்பேன் – ஆதரவாளர்கள் முன் விக்கி

என்றும் உங்களுடன் நானிருப்பேன் என தனது ஆதரவாளர்கள் மத்தியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக மாகாண சபை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் முதலமைச்சர் வாசஸ்தலத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தனர். அதன் போதே முதலமைச்சர் நான் என்றும் உங்களுடனே இருப்பேன் என தமது ஆதரவாளர்களுக்கு தெரிவித்தார். எனக்காகத் திரண்டிருக்கும் உங்களிற்கு என்னால் ஒரே ஒரு வாக்குறுதியைத்தான் வழங்க முடியும். நான் என்றும் உங்களுடனேயே இருப்பேன். இதுவே எனது வாக்குறுதி என்றார் முதலமைச்சர் கோடிக்கணக்கில் நடந்த மருத்துவ உபகரண ஊழல் மோசடி – மக்கள் முன் அம்பலப்படுத்தினார் முதல்வர் வடக்கு மாகணத்தின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு எதிரான கட்டாய விடுமுறைய இரத்துச் செய்து அவர்கள் அமைச்சர்களாக நீடிக்க வழிசெய்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் இன்று நண்பகல் முதலமைச்சரைத் தொடர்புகொண்டு வலிறுயுத்தியுள்ளார். எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் விடுமுறையை விட்டுக் கொடுக்க தயார் ஆனால் சில உத்தரவுகளை நடைமுறைப் படுத்த அவர்கள் இணங்கவேண்டும் என கண்டிப்பான உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் முதலமைச்சர் அலுவலகம் முன் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முன் உரையாற்றிய முதலமைச்சர் உதாரணத்திற்கு ஒரு வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதிலே ஊழல் செய்தால் அது மக்களையே பாதிக்கும் மக்களுக்கு சேவை செய்வதற்காக எனக் கூறி வாங்கிய உபகரணங்களில் ஊழல் என்றால் பாதிப்பு மக்களுக்குத்தானே எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது, பணம் கிடைக்கிறது. வசதிகள் கிடைக்கிறது என்ற காரணத்தால் நாங்கள் செய்வது தார்ப்பரியம் விளங்காமல் போய்விடுகின்றது. இவ்வாறான ஊழல்களிற்கு எதிரான நான் நடவடிக்கை எடுக்கும்போது முட்டுக்கட்டை போடுகிறார்கள். என பூடகமாக உரையாற்றினார்.

எனினும் தனது அலுவலகத்துள் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்ட அமைச்சர்கள் மீது பாரிய மோசடிக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாகக் கிடைத்துள்ள. தான் யாரிற்கும் அடிபணிந்துபோய் விசாரணைகளைக் கைவிடப்போவதில்லை என்றார். மருத்துவ ஊழல் குறித்து முதலமைச்சர் குறிப்பிட்டவை அண்மையில் எழுத்து மூல உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களுடன் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்ட பல கோடி பெறுமதியான மருத்துவ உபகரணக் கொள்வனவு ஊழல் குறித்தே என தகவலறிந்த வட்டாங்கள் தெரிவித்துள்ளன. இதில் பல தலைகள் சிக்கிவிடும் என்பதாலேயே குறித்த சுகாதார அமைச்சரைக் காப்பாற்ற தமிழரசுக் கட்சி கங்கணங்கட்டிநிற்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் ஆதரவு அணி ஆளுநரைச் சந்தித்தது-ஜுன் 16 இரவு

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக ஆளும் கட்சி உறுப்பினர் 15 பேர் கையொப்பம் இட்டு சத்திய கடதாசியுடன் வடமாகாண ஆளூநரிடம் கடிதம் ஒன்றினை கையளித்துள்ளனர். வடமாகாண ஆளூநரின் வாசஸ்தலத்திற்கு ஜுன் 16 இரவு 9.45 மணியளவில் ஆளூநரை மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் சந்தித்து கடிதத்தினை கையளித்துள்ளனர். அக் கடிதத்தில் மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தமிழரசு கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்களாக 15 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். குறித்த கடிதத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம் , எம்.தியாகராசா , ஜி. குணசீலன் , ஆர். இந்திர ராஜா, து.ரவிகரன் , கே.சிவநேசன், அனந்தி சசிதரன், க.சர்வேஸ்வரன், பொ.ஐங்கரநேசன் , விந்தன் கணகரட்னம் , ஏ.புவனேஸ்வரன் , செ.மயூரன் , ஜி.ரி.லிங்கநாதன், ப.கஜதீபன் ,சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

குறித்த கடிதத்தை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில், எமக்கு முதலமைச்சர் மீது நம்பிக்கையுள்ளது. சபை அமர்வை கூட்டி முதலமைச்சரை பொரும்பான்மையை நிரூபிக்க கோரினால், வாக்கெடுப்பில் நாமே வெற்றி பெறுவோம். அந்த வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக அமையும் என தெரிவித்தார்.

பல அமைப்புகள் கண்டனம் 

சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலை முற்போக்கு தமிழ் தேசிய கட்சி கண்டித்துள்ளது வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, அவரது பதவியைப் பறிக்க முற்பட்ட தமிழரசுக் கட்சி, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக்குழு அமைத்து அதன் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்க முற்பட்டவரை நீக்க எடுத்திருக்கும் அவசரமான, அநீதியான நடவடிக்கை எனவும் தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம் எனவும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ் மக்களுக்கு சுயநலமிக்க தமிழ் அரசியல்வாதிகள் துரோகம் செய்வது முதற்தடவையல்ல எனவும் இதற்கு முன்னர் அரங்கேறிய சம்பவங்களின் போது அமைதி காத்த தமிழ் மக்கள் இனியும் அமைதி காப்பார்கள் என்று யாரும் எண்ணிவிடக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதலமைச்சர் என்ற உயர் பதவிக்கு மக்களால் கொண்டுவரப்பட்டவரை எதேச்சாதிகாரமாகத் தூக்கியெறிய முற்பட்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தொகுப்பு-பாறுக் ஷிஹான்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -