அப்துல்சலாம் யாசீம்-
நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் மாவட்டம் தோறும் சென்று மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்ற விஷேட திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நடமாடும் சேவை இன்று (15) திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் முகமாக நடாத்தப்படும் 05வது நடமாடும் சேவை இதுவாகும்!
சிறுநீரக நோய் பரவலாகக்காணப்படும் பிரதேச மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்காக RO PLANT எனப்படும் நீர்ச்சுத்திகரிப்பு இயந்திரங்களை பெற்றுக்கொடுத்தல். குழாய் நீர் விநியோக இணைப்பை பெற்றுக்கொள்ள பொருளாதார வசதியற்ற குடும்பங்களுக்கு இலவச இணைப்புகளை பெற்றுக்கொடுத்தல். பாடசாலை.வைத்தியசாலை.மத வழிபாட்டுத்தலங்கள் முதலான பொது இடங்களுக்கு நீரை தேக்கி வைக்கக்கூடிய 30 நீர்த்தாங்கிகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
திருகோணமலை மாவட்டத்திலும் டெங்கு நோய் தொற்று நோய் காணப்படுவதால் நோயாளிகளுக்கு வசதியேற்படுத்தும் நோக்கில் பல வைத்தியசாலைகளுக்கு கட்டில் மெத்தை கையளித்தல் சரியான பொது சுகாதார வசதியற்ற குடும்பங்களுக்கு கழிவரை வசதியை ஏற்படுத்திக்கொள்வதற்கு வசதியாக 75 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குதல். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சபையின் உப காரியாலயமொன்றினை கிண்ணியாவில் திறந்து வைத்தல் போன்ற செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.தௌபீக். அப்துல்லாஹ் மஹ்ரூப். கே.துரைரெட்ணசிங்கம் கிழக்கு மாகாணசபை அமைச்சர்களான ஏ.எல்.எம்.நஸீர். ஆரியவத்தி கலப்பத்தி மற்றும் உறுப்பினர்களான ஜே.எம்.லாஹீர் -டொக்டர் அருண சிறிசேன .ஆர்.எம்.அன்வர் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சட்டத்தரணி பாயிஸ் மற்றும் திணைக்களங்களின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.