முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் வக்ப் சபையின் செயற்பாடுகள் திருப்தியற்ற நிலையில் காணப் படுவதால் பொது மக்கள் அதன் மீது அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
பள்ளிவாயல் பதிவு, புதிய நிர்வாகத் தெரிவு, புதிய நிர்வாகப் பதிவு போன்ற பள்ளிவாயல் சம்பந்தப் பட்ட இன்னோரன்ன செயற்பாடுகள் வக்ப் சபையினால் முன்னெடுக்கப் படுகின்றன.
வக்ப் சட்ட ஏற்பாடுகளின் படி ஒரு பள்ளிவாயலின் நிர்வாகம் மூன்று வருடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்கப் படுகின்றது. ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பள்ளிவாயல் நிர்வாகம் சுமார் 25 வருட காலம் புதுப்பிக்கப் படாமல் உள்ளது. இந்த நிருவாகத்தில் சிலர் இறந்து, சிலர் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளதால் தனி நபர் ஆதிக்கம் அதிகரித்து ஜனநாயகம் புறந் தள்ளப் பட்டுள்ளது.
இது குறித்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கவனத்துக்கு பல்வேறு தரப்பினரும் கொண்டு சென்ற போதும் திணைக்களமோ, வக்ப் சபையோ இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அனுப்பப் படுகின்ற பதிவுத் தபால்களுக்கு கூட திணைக்களத்திலிருந்து பதில்கள் அனுப்பப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப் படுகின்றது.
இந்த விடயம் குறித்து முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீமுக்கு தெரிய படுத்திய போதும் அவரிடமிருந்தும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப் பட்டதாக தெரியவில்லை என சம்பந்தப் பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே ஒட்டு மொத்தமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்ப் சபை ஆகியவற்றில் ஏதும் முறைகேடுகள் இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப் படுகின்றது