அவர் மேலும் தெரிவித்ததாவது.
முஸ்லிம்கள் மத்தியில் பல கட்சிகள் இருக்கும் போது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பின் அவசியம் என்ன என்பதைக்கூட முஸ்லிம் சமூகம் விளங்காத நிலையே இன்னமும் உள்ளது.
வரலாற்றில் தமிழ் மக்களிடையே ஆளுந்தரப்புடன் இணைந்து செல்லும் கட்சிகளும் இருந்தன. ஆளுந்தரப்பை தொடர்ச்சியாக எதிர்க்கும் தமிழ் கட்சிகளும் இருந்துள்ளன. ஆனாலும் அரச தரப்பு தமிழ் அரசியல் கட்சிகளால் அரசிடமிருந்து சில சலுகைகளை பெற முடியுமே தவிர உரிமைகளை பெற முடியாது என்பதால் அரச எதிர்ப்பு தமிழ் கட்சிகள் தோற்றம் பெற்றன. அத்துடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அரச எதிர்ப்பு கட்சிகளையும் தென்னிலங்கை மலையக தமிழர்கள் அரச ஆதரவு கட்சிகளையும் தமது யதார்த்த சூழல்களை புரிந்து ஆதரித்தனர்.
அரசை எதிர்க்கும் தமிழ் கட்சிகள் பிரிந்து செயற்படாமல் கூட்டமைப்பாக செயற்படுவதன் மூலம் அரசியல் உரிமைகளை பெற முடியும் என்ற புலிகளின் அழுத்தத்திற்கிணங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்றம் பெற்றது. இதில் மத்திய அரசில் அமைச்சர்களைக்கொண்ட எந்தவொரு தமிழ் கட்சியும் கூட்டிணைத்துக்கொள்ளப்படவில்லை என்பதால் ஒரு கொள்கையுள்ள நேர் கோட்டில் தமிழ் கூட்டமைப்பு பயணிக்கிறது.
பொதுவாக முஸ்லிம்கள் தமிழர்களை பார்த்து தாமும் சூடு போட்டுக்கொள்ளும் மனோநிலையில் உள்ளார்களே தவிர ஏன், எதற்கு என்று சிந்தித்து சூடு போடுவதை காண முடியவில்லை.
முஸ்லிம்களை பொறுத்தவரை அரசுக்கு ஆதரவு இல்லாமல், அரசை எதிர்த்து நிற்கும் எந்தவொரு முஸ்லிம் கட்சியும் முஸ்லிம்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. இதற்கு பிரதான காரணம் அரசுக்கு ஆதரவான கட்சிகளையே முஸ்லிம்கள் விரும்புவதுதான். இவ்வாறு தனிக்கட்சியாக நின்று அரசை எதிர்ப்பதற்குக்கூட முடியாத நிலையில் அரச ஆதரவு கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்படும் முஸ்லிம் கூட்டமைப்பு என்பதும் கூட்டாக அரசுக்கு சாஷ்டாங்கம் செய்யும் மந்தைக்கூட்டத்தை உருவாக்கியதாகவே முடியும். இத்தகைய கூட்டமைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒப்பிடுவது விலாங்கு மீனை பாம்புடன் ஒப்பிடுவதாகும். அந்த விலாங்கு மீன் மிக விரைவாக அரசின் பசிக்கு இரையாகி விடும்.
ஆகவே முஸ்லிம் கூட்டமைப்பு ஏன், எதற்காக என்று நாம் முதலில் சிந்திக்க வேண்டும். கூட்டமைப்பு ஆரம்பித்து அரசுக்கு முட்டுக்கொடுப்பதாயின் அப்படியொரு கூட்டமைப்பு அவசியம் இல்லை. அதனால் சமூகம் நன்மை அடையப்போவதுமில்லை. அந்த முட்டுக்கொடுப்பை முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக செய்து கொண்டுதானிருக்கிறது.
இந்த நிலையில் அரசுடன் இணைந்துள்ள முஸ்லிம் கட்சிகளும் அந்தக்கட்சிகளுடன் முரண்பட்டு விலகியவர்களும் அரசின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்ற நிலையில் இருப்பவர்களும் இணைந்து முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்குவது என்பதும் அர்த்தமற்றதாகும்.
அதே வேளை கிழக்கு முஸ்லிம்களை ஏமாற்றும் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக வேண்டும் என்ற கருத்து உருவானால் அது வரவேற்புக்குரியதாக இருக்கும். அதனை மு. காவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்க முடியும். ஆனாலும் இது விடயத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் பதவி விடயத்தில் மட்டும் முரண்பட்டு இன்னமும் அக்கட்சியிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறாமல் தடுமாறிக்கொண்டிருப்பவர்களுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரசுக்கெதிரான முஸ்லிம் கூட்டமைப்பு சாத்தியமாக மாட்டாது. காரணம் இத்தகையவர்கள் கொள்கை அடிப்படையில் மு. காவிலிருந்து அதிருப்தியடையவில்லை. மாறாக சுயநலமே காரணமாகும். அக்காரணத்துக்குரிய பலன் கிடைக்கும் பட்சத்தில் முஸ்லிம் கூட்டமைப்பும் காட்டிக்கொடுக்கப்படலாம்.
ஆக மொத்தத்தில் முஸ்லிம் சமூகம் அனைத்தும் அரசுடன் சார்ந்த அரசியல் கட்சிகளை ஆதரிப்பதா அல்லது அரசை எதிர்க்கும் கட்சிகளையும் ஆதரிப்பதா என்ற தெளிவுக்கு முதலில் வர வேண்டும். அதன் பின் அரசுக்கு எதிரான முஸ்லிம் கட்சிகள் மத்தியில் கூட்டமைப்பை உருவாக்கி உரிமைக்காக பாடு பட முடியும். அதே போல் கிழக்கில் முஸ்லிம் காங்கிரசை ஓரம் கட்ட முஸ்லிம் கூட்டமைப்பு வேண்டும் என்றால் மு. காவை கொள்கையளவில் எதிர்க்கும் முஸ்லிம் கட்சிகள் ஒன்று பட்டு கூட்டமைப்பை ஏற்படுத்தினால் அதில் வெற்றி காணலாம்.
ஆனாலும் இவை அனைத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற வீரியம் கொண்டதாக அமையாது. காரணம் முஸ்லிம் பொது மக்கள் அரச எதிர்ப்பு கட்சிகளுக்கோ, முஸ்லிம் காங்கிரசின் ஏமாற்றுக்களை சுட்டிக்காட்டும் கட்சிகளுக்கோ தார்மீக ஒத்துழைப்பை வழங்கும் பக்குவத்தை இன்னமும் அடையவில்லை.