திருட்டு ஹபாயாக்களை வாங்கி அவற்றை விற்பனை செய்தமை தொடர்பில் காத்தான்குடியிலுள்ள உடுதுணிகள் கடை வர்த்தகர்கள் இருவர் வியாழக்கிழமை 20.07.2017 இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, மீரிஹானையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றிலிருந்து பெறுமதி மிக்க ஹபாயாக்களைத் திருடி அவற்றை உடுதுணிக்கடைகளுக்கு விற்பனை செய்து வந்த சந்தேகத்தின் பேரில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களையும் அழைத்துக் கொண்டு வியாழக்கிழமை 20.07.2017 இரவு காத்தான்குடிக்கு வருகை தந்திருந்த மீரிஹான பொலிஸார் காத்தான்குடி நகரில் வைத்து இந்த இரு உடுதுணிக் கடை வர்த்தகர்களையும் கைது செய்தனர்.
சந்தேக நபர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி பெறுமதி வாய்ந்த ஹபாயாக்கள் காத்தான்குடியி;லுள்ள கடைகளில் மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி காத்தான்குடியிலுள்ள ஒரு கடையில் 24 ஹபாயாக்களும், மற்றொரு கடையில் 36 ஹபாயாக்களும் சந்தேக நபர்களால் விற்கப்பட்டிருக்கின்றன.
குறித்த இரு வர்த்தகர்களும் சந்தேக நபர்களால் அடையாளம் காட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.