ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
திட்டமிடப்பட்ட கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகர வீதியை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையைத் ஆரம்பிக்கும் முகமாக அகலமாக்கும் பணிகளுக்காக விரிவாக்குவதற்கு அடையாளமிடப்பட்ட நகரக் கட்டிடங்களை விரைவாக அகற்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் நகர சபைச் செயலாளர் வியாழக்கிழமை 06.07.2017 பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் மூலம் பொது அறிவித்தல் மூலமும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
அந்த அறிவித்தலில் அடையாளமிடப்பட்டுள்ள எல்லை வரையுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கான கால எல்லை ஜுன் மாத இறுதி வாரத்துடன் முடிவடைந்துள்ளதாகவும் இன்னமும் அகற்றாதிருக்கும் கட்டிடங்களை மிக விரைவாக அகற்றுமாறும் கட்டிட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுளூ
கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகர பிரதான வீதியை அகலமாக்கி அபிவிருத்தி செய்வது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மக்கள் பிரதிநிதிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்கெனவே, பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்டு கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகள் பெறப்பட்டதுடன், வீதியை அகலமாக்கும் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பது என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் கடை அறைகளை பின்நோக்கி நகர்த்துவதற்கு ஜுன் இறுதி வாரம் (நோன்புப் பெருநாள்) வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது நோன்புப் பெருநாள் வியாபார நடவடிக்கைகள் யாவும் நிறைவடைந்துள்ளதால் கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் தமது கடைகளை ஏற்கனவே இடப்பட்ட அடையாளத்தின் அடிப்படையில் பின்நோக்கி நகர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏறாவூர் ஒரு வர்த்தக மைய நகராக இருப்பதால், சித்திரைப் புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாள் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு ஜுன் மாத இறுதிக்;கு நெடுஞ்சாலை அபிவிருத்திக்காக கட்டிடங்களைத் தகர்க்கும் செயற்பாடுகள் கால நீடிப்புச் செய்யப்பட்டிருந்தன.
ஏறாவூர் நகரை ஊடறுக்கும் கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை தற்போதிருக்கும் அளவிலிருந்து சரியாக ஒரு அடி உயர்த்தப்படவுள்ளது.
நெடுஞ்சாலையின் மத்தியிலிருந்து வலமும் இடமும் 11.5 மீற்றர் அகலத்தில் 4 வழித்தடங்களுடன் இருபக்க நடைபாதை மற்றும் இருபக்க வடிகான் ஆகியவற்றைக் கொண்டதாகவும் மத்தியில் மின் விநியோகக் கம்பங்களைக் கொண்டதாவும் புதிய கார்பெற் வீதி திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
வீதி அகலமாக்கும் திட்டத்திற்குள் 607 கடைகள், 347 வீடுகள், 187 வெற்றுக் காணிகள் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.