எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தல் விடயத்தில் கிழக்கு முஸ்லிம் சமூகம் தமது எதிர்கால இருப்பை முன் வைத்து மிக கவனமாக முடிவெடுக்க வேண்டும் என உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை தேர்தல் சம்பந்தமாக கட்சியின் கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது
கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் முதலமைச்சர் தேவை என்ற தேவையற்ற இனவாத பிரசாரம் முன்னைய தேர்தல்களில் முன்னெடுக்கப்பட்டது. அதே போல் தமிழ் முதலமைச்சர் தேவை என தமிழர் தரப்பில் மக்கள் உசார்படுத்தப்பட்டனர். தமிழரோ முஸ்லிமோ இனவாதம் இல்லாத ஒருவரே வரவேண்டும் என்பதை உலமா கட்சி சொல்லி வந்தது.
இதுவரை கிழக்கின் முதலமைச்சர்களாக தமிழரும் முஸ்லிம்களும் இருந்துள்ளார்கள். இவர்களால் கிழக்கு மக்கள் நன்மை பெற்றதை விட முதலமைச்சர் முஸ்லிமா தமிழரா என இரு சமூகங்களும் கருத்து மோதிக்கொண்டதே அதிகம். இரண்டு முஸ்லிம் முதலமைச்சர்களை கண்டும் முஸ்லிம்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. எதிர் பார்க்கப்பட்ட அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் முதலமைச்சர் வரவிடக்கூடாது என பிரசாரம் செய்த முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்பின் உதவியுடன் முஸ்லிம் முதலமைச்சரை பெற்றது. முஸ்லிம் முதலமைச்சர் வரக்கூடாது என்ற பிரசாரத்தை முன்னெடுத்த தமிழ் கூட்டமைப்பினர் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு முஸ்லிம் முதலமைச்சருக்கு ஆதரவளித்தனர். கடைசியில் இந்த இரு கட்சியினரும் சுருட்டுவதை சுருட்டிக்கொண்டனரே தவிர இரு சமூகங்களும் பெரிதாக நன்மையடைவில்லை.
அதே போல் எதிரே வரும் தேர்தலின் பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வருவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நன்றிக்கடன் செய்யும். அவ்வாறான பட்சத்தில் இரு மாகாணசபை முதலமைச்சர்கள் இணைந்து அம்மாகாணங்களை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தால் அவற்றை இணைக்க பாராளுமன்றத்தில் முடிவெடுக்க முடியும் என்ற சட்டத்துக்கிணங்க வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட சாத்தியங்கள் உண்டு.
இவ்வாறானதொரு பட்சத்தில் பாராளுமன்றத்தில் இரண்டிலொரு வாக்கு கிடைக்குமா என ரவூஃப் ஹக்கீம் போன்றோர் கேட்கலாம். ஏற்கனவே அவர் கேட்டும் உள்ளார். கோடிகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தள்ளினால் எந்த வாக்கெடுப்பில் வெல்லலாம் என்பதை கடந்த லாராளுமன்றங்களில் நாம் கண்ட நிலையில் கோடிகளுக்கு ஆசைப்பட்டே திவிநெகும, 18வது திருத்தச்சட்டம் போன்றவற்றுக்கு முஸ்லிம் காங்கிரசும் துணை போய்விட்டு மடத்தனம் பண்ணிவிட்டோம் என்ற ஒரு வார்த்தையினால் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தை சமாளித்த வரலாற்றை நாம் மறந்து விட முடியாது.
அதே போல் கடந்த கால தமிழ் முதலமைச்சராக இருந்த பிள்ளையான் போன்ற வடக்கு கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட தமிழர் ஒருவர் முதலமைச்சரானால் அது வடக்கு கிழக்கு இணைப்புக்கு சாத்தியமாகாது. ஆனாலும் இன்றைய நிலையில் தமிழ் மக்களை ஏமாற்ற தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் மக்களை ஏமாற்ற முஸ்லிம் காங்கிரசும் என்ன விலையும் கொடுப்பார்கள் என்பது உறுதியானதாகும்.
ஆகவே தொடர்ந்தும் ஏமாற்றப்படும் கிழக்கு முஸ்லிம்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும். நல்லாட்சி விடயத்தில் உலமா கட்சி சொல்வதை கேளாமல் முடிவெடுத்து விட்டு இப்போது தலையில் அடித்துக்கொள்வது போல் கிழக்கு மாகாண சபை தேர்தலிலும் முடிவெடுப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.