இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அண்மைக்காலமாக குறிப்பாக காலைப்பொழுதில் கல்முனைப் பிராந்தியத்தில் அடிக்கடி கணப்பொழுதில் மின்தடை ஏற்பட்டு மறைகிறது. கணப்பொழுதிலான இம் மின்சாரத்தடையானது கணனி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் தொடக்கம் சலவை இயந்திரம் வரை பாதிப்பை அல்லது தடங்கலை ஏற்படுத்திவருகின்றது.
சில இயந்திரங்களை பழுதடையச்செய்கின்றன. மின்பட்டியல் கட்டணத்தை செலுத்த சற்று தாமதமாகிவிட்டால் குறுந்தகவல் மூலம் அறிவிக்கும் இலங்கை மின்சார சபையினர் இப்படி மக்களுக்கு பாதிப்பை அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாட்டை நிவர்த்திக்க முன்வரவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கல்முனை காரைதீவு சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் இக்கணப்பொழுதிலான மின்சாரத்தடை உணரப்பட்டுவருகின்றதாக பொதுமக்கள் குறைபட்டுக்கொள்கின்றனர்.இது தொடர்பாக கல்முனை மின்சார சபையினரிடம் தொடர்புகொண்டபோது மின்தடை காலைப்பொழுதில் உணரப்படுவது பற்றி எம்மிடமும் பலர் தெரிவித்திருக்கின்றனர்.
அது உண்மை. நாம் அதனை ஆராய்ந்துபார்த்தபோது சாய்ந்தமருதிலுள்ள வொலிவேரியன் மீள்குடியேற்ற கிராமப்பகுதியில் காலையில் இயங்கும் மாடறுக்கும் கொல்களத்திற்கு பறவைகள் நாடிவருகின்றன. அங்கு ஒருபக்கம் நீர்நிலையுமுண்டு. அதற்கும் அவைகள் வருவதுண்டு. அந்தப்பிரதேசத்தினூடாகத்தான் உயர்அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன.
இப்பறவைகள் பெருமளவில் இக்கொல்களத்தை நோக்கி வரும்போது அதில் அடிபடுகின்றபோது கணப்பொழுதில் எமது றிப் சுவிற்ச் (இடறு ஆளி) இயங்குவதால் மின்தடை ஏற்படுகின்றது. மறுகணம் சீராக இயங்குகின்றது. இதனை சீர் செய்வதென்றால் ஒன்றில் கொல்களத்தை இடம்மாற்றவேண்டும். அல்லது காவலிட்ட மின்கம்பிகளை இடவேண்டும் என்றனர்.(வீ)