எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை அந்நூர் தேசிய கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் எம்.எம்.யூனூஸ் கான் நெல் விதைக்கும், உரம், எண்ணெய் விசுறும் செயற்பாடுகளைக்கொண்ட இயந்திரமொன்றினை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார். குறித்த இயந்திரம் மூலம் மேற்கூறிய செயற்பாடுகளைத் திறம்பட மேற்கொள்வதோடு, தானியக்க கருவியூடாக வயல் வரப்புகளிலிருந்து கொண்டே சிரமமின்றியும் இயக்கும் திறனைக்கொண்டமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் எம்.எம்.யூனூஸ் கான், அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பினை காட்சிப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்று எதிர்வரும் ஒகஸ்ட் மாதாம் 11ம் திகதி தென் கொரியா பயணமாகவுள்ளார்.
இந்த சர்வதேசக் கண்காட்சியில் பங்கு பற்றி எமது நாட்டுக்கும் எமது மண்ணுக்கும் கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்க்க வேண்டுமெனப் பிராத்திப்பதோடு, இளவயதில் இச்சாதனையினை நிலைநாட்டிய குறித்த மாணவனுக்கு பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர் மற்றும் பாடசாலை நிருவாகத்தினர், ஊர்ப்பிரமுகர்கள் எனப்பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிகின்றனர்.
குறித்த இயந்திரம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு சந்தைக்கு வருமிடத்து விவசாயச்செய்கையில் பாரிய மாற்றத்தைக் கொண்டு வருதோடு, பணச்செலவீனத்தையும் குறைக்குமென்பது நிச்சயம். அதே நேரம், விவசாயத்தை நம்பியிருக்கும் எமது பிரதேச விவசாயிகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாக குறித்த இயந்திரம் அமையுமென எதிர்பார்க்கலாம்.
அவரது ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புக்களும் தொடர எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.