கிழக்கிலங்கையில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் ஆலயத்தின் வருடாந்த திருவிழாக்காலத்திற்கு முன்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்பட்டுவரும் சிரமதான வேலைத்திட்டமும் விசேட பூஜை வழிபாடுகளும் இம்முறை கடந்த (ஜூன்) 30 மற்றும் (ஜூலை) 01 ஆம் திகதிகளில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றன.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த சுமார் நூறு உத்தியோகத்தர்கள் இணைந்து இச்சிரமதானப் பணிகளை முன்னெடுத்ததுடன், இரு தினங்களிலும் உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் தொடர்ச்சியான சிரமதான வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. 30 ஆந் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் விசேட பூஜை வழிபாடுகள் பிரதேச செயலாளரின் தலைமையில் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் சிவாச்சாரியாரால் நிறைவேற்றப்பட்டதுடன், அன்றைய தினம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பொங்கல் வைபவமும், நிருவாக உத்தியோகத்தர் ஆறுமுகம் சசீந்திரன் தலைமையில் விசேட பஜனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறிப்பிட்ட பூஜை நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆலயத்திற்கு வருகைதந்திருந்த தமிழ், சிங்கள முருகன் அடியவர்கள் பெருமளவில் பங்கெடுத்திருந்ததுடன், இம்முறை கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழாக் காண குமண வனாந்தரத்தினூடாக பாதயாத்திரை செல்லும்பொருட்டு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் புறப்பட்டுவந்து உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் தங்கியிருந்த அடியவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.