அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-பக்மீகம பகுதியில் ஜொனி பட்டா என்ற வர்க்க கைக்குண்டொன்றை இன்று (22) மீட்டுள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர். புலிக்கண்டிகுளம் ஐ.ஏ.பியந்த தேசப்பிரிய என்பவருடைய வீட்டு வளாகத்தில் கைக்குண்டொன்று இருப்பதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 ற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த கோமரங்கடவெல பொலிஸார் கைக்குண்டொன்றை மீட்டனர்.
குறித்த வீட்டு வளாகத்திற்கு புலிக்கண்டிகுளம் குளத்திலிருந்து மண் போடப்பட்டதாக தெரிவித்த வீட்டு உரிமையாளர் இன்றைய தினம் துப்பரவு செய்யும் போது கைக்குண்டு காணப்பட்டதாகவும் தெரிவித்தார். மீட்கப்பட்ட கைக்குண்டை நீதிமன்ற அனுமதியுடன் செயலிழக்க செய்யவுள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.