இந்நாடு தனியொரு இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல - அமைச்சர் மனோ

சிங்கள இனத்தின் முதல் மன்னன் விஜயன் வெளியில் இருந்து வந்து இலங்கை தீவில் குடியேறினான், யாழ்ப்பாண இராஜ்ஜியம், நவீன இலங்கை எழுச்சிக்கு மலையக தமிழரின் பங்களிப்பு, இலங்கை முஸ்லிம்கள் உட்பட இந்நாட்டில் பல இன, மதத்தவர் வாழ்கின்றனர், கண்டி இராஜ்ஜியத்தின் கடைசி ஐந்து மன்னர் தமிழர், இந்நாட்டின் ஆதிகுடிகள் வேடர் போன்ற உண்மைகள் திரைப்போட்டு மறைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு வரும் இந்நாட்டு சரித்திரத்தை,சவாலுக்கு உட்படுத்தி, இந்நாடு தனி ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல என்ற உறங்கும் உண்மையை நான் வெளிக்கொண்டு வந்துள்ளேன்.

நமது தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் வெளியீடானஇலங்கை மக்கள் (People of Sri Lanka) என்ற நூலை நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர்,பிரதம நீதியரசர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் ஆகியோரை அழைப்பித்து அதிகாரபூர்வாக வெளியிட்டுள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஜனநாயக இளைஞர் இணையத்தின் வாராந்திர கலந்துரையாடலில் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, 

இந்த முயற்சி மிகப்பெரும் சவாலான முயற்சி. பல இனங்கள் வாழ்கின்றார்கள் என்ற பன்மை தன்மையை அனைவரும் ஏற்றுக்கொள்வதில்தான், இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது. இந்த என் முயற்சியை இனவாதிகள் நிச்சயம் எதிர்ப்பார்கள். இது எனக்கு தெரியும். அதுபற்றி நான் கவலைப்பட போவதில்லை. நான் சொல்வது பிழை என்று என்னுடன் எவரும் மோதினால், அப்படி சொல்பவர்களை எந்த மேடையிலும் சந்திக்க நான் தயார்.

நான் சிறுவனாக பள்ளியில் படித்த போது பாட நூல்களில் இருந்த சரித்திர உண்மைகள் இப்போது இல்லை. அவற்றை அழித்து வரலாற்றை திரித்து விட்டார்கள். இந்த மறைக்கப்பட்ட சரித்திரத்தைதான் எடுத்து கூறி, அதை அதிகாரபூர்வமாக செய்துள்ளேன். இதை இந்நாட்டின் தமிழ்,முஸ்லிம் மக்கள், அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், மதத்தலைவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை நான் வெறுமனே பூட்டிய அறைக்குள் நடத்த வில்லை. நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம நீதியரசர், எதிர்க்கட்சி தலைவர்,அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் போன்ற பிரமுககளை அழைப்பித்து அதிகாரபூர்வாக வெளியிட்டுள்ளேன். உண்மையில் இந்நாட்டின் சுதந்திர தின நிகழ்விலேயே இந்த அனைவரும் ஒருசேர கலந்துக்கொள்வார்கள். அதையடுத்து இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து இந்த வெளியீட்டை அதிகாரபூர்வமாக மாற்றியுள்ளார்கள். ஆங்கிலத்தில் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை நாம் இப்போது சிங்கள, தமிழ் மொழிகளிலும் மொளிபெயர்த்துக்கொண்டுள்ளோம். 

விஜயன் இலங்கைக்கு வந்த நிகழ்வை ஞாபகப்படுத்தி, 1956ம் ஆண்டு வெளியிட்ட அஞ்சல் முத்திரையை, 1965ம் ஆண்டு இலங்கை அரசு வாபஸ் வாங்கி கொண்டது. இந்த அர்த்தம் என்ன?சிங்கள இனத்தவர் வெளியில் இருந்து இந்த தீவிற்கு வரவில்லை. ஆனால் ஏனைய எல்லோரும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்தை விதைக்க முயற்சி அன்றே ஆரம்பித்து விட்டது. ஆகவேதான் பாட நூல்களில் இது இன்று இல்லை. யாழ்ப்பாண இராஜ்ஜியம், கண்டி இராஜ்ஜியத்தின் கடைசி ஐந்து மன்னர் தமிழர், நவீன இலங்கை எழுச்சிக்கு மலையக தமிழரின் பங்களிப்பு, இலங்கை முஸ்லிம்கள் உட்பட இந்நாட்டில் வாழும் பல இன, மதத்தவர் மற்றும் இந்நாட்டின் ஆதிகுடிகள் பற்றிய உண்மைகள் எல்லாம் குறைக்கப்பட்டு அல்லது முற்றாக அகற்றப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -