தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரையும் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார் .
யாழப்பாணத்தில் இன்று(4) செவ்வாய்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட அவர்,
நாம் தொடர்ந்து மக்கள் சந்திப்புக்களினை நடத்திவருகின்றோம்.மக்களது கேள்விகளிற்கு பதிலளிக்கின்றோம். பலரும் மாகாணசபை விவகாரம், அரசியல் தீர்வுதிட்ட வரைபு போன்றவை தொடர்பினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரையும் பகிரங்க விவாதத்தில் சந்திக்க தயாரா என கேட்டுவருகின்றனர்.
நான் இப்பத்திரிகையாளர் சந்திப்பினில் சவால் விடுகின்றேன்.மக்கள் முன்னிலையினில் அல்லது ஊடகவியலாளர்கள் முன்னிலையினில் அத்தகைய விவாதத்திற்கு கூட்டமைப்பினர் தயாராவென அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனிடையே அடுத்தடுத்து நெருக்கடிகளைச் சந்தித்துவரும் தமிழரசுக்கட்சி தன்னுடைய வாக்குவங்கியை தக்க வைப்பதற்கான முனைப்புக்களிலும் தீவிரம் காட்டிவருகின்ற அதேவேளையில் மக்கள் சந்திப்புக்களை தொடங்கியுள்ளது. நடைபெற்றுமுடிந்த வடக்குமாகாணசபை நெருக்கடி நிலையினை அடுத்து ஆட்சிக் கவிழ்ப்பிற்கு முற்பட்டு தோல்விகண்ட தமிழரசுக்கட்சி தற்போது தங்கள் மீதான விமர்சனங்களை ஈடுசெய்வதற்கான கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றது என்றார் அவர்.