தற்போதய ஆட்சியில் நடக்கும் ஊழல்களை பார்க்கும் போது இவ்வாட்சியில் ஊழல் நடக்கின்றதா அல்லது ஊழலில் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது எனவும் எமது ஆட்சி காலத்தில் ஊழல்கள் இடம்பெற்றதாக எமக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் எங்கே என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸகேள்வி எழுப்பியுள்ளார். நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறுஅவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
இன்றைய ஆட்சியாளர்கள் எமது ஆட்சி காலத்தை நோக்கி என்னென்ன குற்றச் சாட்டுக்களை முன்வைத்தார்களோ அத்தனையும் இன்று சாதாரணமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. தற்போது நாட்டில் இடம்பெறும் ஊழல் குற்றச் சாட்டுக்களை நோக்குகின்ற போது எதிர்காலத்தில் இலங்கை நாடுபொருளாதார ரீதியான மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படலாம் என்ற அச்சம் ஏற்படுகிறது. இன்று இலங்கையில் இடம்பெறும் ஊழல்களின் உதாரண புருஷராக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க திகழ்கிறார்.
இதில் ஒரு சம்பவம் மத்திய வங்கியின் பிணை முறி விவகாரமாகும். அதன் பிரதான ஊழல் கதாநாயகனாக மத்தியவங்கியின் ஆளுநர் திகழ்ந்தார். அவருக்கு இவ்வாட்சியாளர்கள் தான் குறித்த விவகாரத்துக்கு குடை பிடித்துகாப்பாற்றி வருகிறார்கள் என்பதெல்லாம் வெளிப்படையான விடயங்களாகும். இவருடைய மருமகனே அர்ஜுன் அலோசியஸ் என்பவராகும். இவர் தான் பெரும் சர்ச்சைக்குரிய தற்போது நிறுவப்பட்டுக்கொண்டிருக்கும் கல்குடா சாராய உற்பத்தி தொழிற் சாலையின் சொந்தக்காரர். இவருக்கு பேர்பச்சுவல் ஸ்டரீஸ் எனும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனமானது மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிதிநிறுவனங்களில் ஒன்றாகும்.
குறித்த நிறுவனத்தின் சொந்தக்காரரான அலோசியஸ் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருநானாயக்கவுக்குமாதமொன்று பதினான்கு இலட்சம் வாடகையில் அபார்ட்மென்ட் ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளார். குறித்தவாடகை ஒப்பந்தந்தமானது ஆலோசியசின் குறித்த நிறுவனத்தின் பெயரில் இருப்பதோடு குறித்த அபார்ட்மென்ட்டில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஒரு வருடம் வசித்தற்கான சான்றுகளும் உள்ளன.
இது தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் குறித்த ஒப்பந்தத்துக்கானசான்றுகள் உட்பட மேற்கூறிய அனைத்தையும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் குறித்த அபார்ட்மென்டானது பதினாறு கோடி ரூபாய்க்கு ரவி கருணாநாயக்கவின் மனைவியின் நிறுவனத்தால்கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு ரவி கருணானாயக்கவுக்கும் அலோசியசுக்கும் இடையிலான இலஞ்ச தொடர்ந்து உறுதியாகியுள்ளது என்பதை நான் சொல்லித் தான் அறிய வேண்டியதில்லை. எதற்காக இவரது நிதி அமைச்சை தற்போதைய ஆட்சியாளர்கள் புடுங்கி எடுத்தார்கள் என்பதை இதன் மூலம் பூரணமாக யூகித்து கொள்ள முடியும். இருந்தபோதிலும் அவருக்கு இன்னுமொரு பலமான அமைச்சை வழங்கி அவரது கவனத்தை வேறு பக்கம் திசைதிருப்பியுள்ளார்கள். நிதி அமைச்சராக இருந்து கொண்டு ஊழல் செய்வது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. அதனை மூலம் ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்த இயலாமல் போய்விடும் என்பதால், இங்கு திருடவேண்டாம் அங்கு திருடு என்று அனுப்பியுள்ளார்கள்.
இவர்கள் தான் எமது ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழலை ஒழிக்க வந்தவர்கள். ஓட்டை சுரட்டையினுள் நீர் அள்ளி அருந்த முடியாது. முதலில் இவ்வரசாங்கம் தங்களது சிரட்டையில் உள்ள ஓட்டைகளை அடைத்து கொள்ள வேண்டும். இன்று எங்களுக்கு ஆதரவானவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஊழல் விசாரணைகள் அவர்களை அடக்குவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு உபாயமாகும். குறித்த விசாரணை செய்யப்படும் நபர்கள் தற்போதைய அரசுக்கு ஆதரவளிக்கின்றோம் என்று கூறினால் அவர்கள் மீதான அனைத்து குற்றச் சாட்டுக்களையும் இல்லாமலாக்கி தூய்மையானவர்களாக அறிவிப்பார்கள். இதனையெல்லாம் தாண்டியோ எம்மோடு பயணிப்பவர்கள் உள்ளார்கள் என்பதை இந் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கடந்த நாட்களில் ரவி கருணானாயக்க ஜனாதிபதி ஊழல் ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக வேண்டி அழைக்கபட்டிருந்தார். அங்கு சென்றால் அகப்பட்டுக்கொள்வோம் என்ற அச்சத்தில் தனிப்பட்ட காரணத்தை முன்வைத்து அங்கு செல்வதை தவிர்த்துக் கொண்டுள்ளார். இவ்வரசாங்கம் நிலைத்திருக்கின்ற வரை அவரின் உரோமத்தை கூட யாராலும் அசைத்திட முடியாது. தற்போதைய ஆட்சிக்குள் கள்வர்கள் உள்ளார்கள் என உண்மையை கூறிய அமைச்சர் ரஞ்சனை வெளியேறக்கூறிய இவ் அரசில் இவற்றுக்கு நீதி கிடைக்கும் என நம்புவது கானல் நீர் கதையே என அவர் குறிப்பிட்டுள்ளார்.