கிழக்கு மாகாண ஆளுநராக இதுவரை பணியாற்றி வந்த ஒஸ்ரின் பெர்னாண்டோ ஜனாதிபதியின் செயலாளராக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நியமனம் பெறப்போவதையிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநர் நியமன விடயமாக ஜனாதிபதிய எம்மோடு தொடர்பிலுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் ஐயாவும் தற்போது ஜேர்மனில் உள்ளனர்.
அவர்களும் கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசியுள்ளார்கள்.
சிறப்பான ஒரு ஆளுநர் நியமிக்கப்படுகின்ற போதுதான் கிழக்கு மாகாணத்திலே நாம் இதுவரைக் கட்டியெழுப்பிய நல்லாட்சியின் பலாபலன்களை மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியும்.
இந்த விடயமாக நான் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளேன். அதன்படி நிச்சயமாக கிழக்கை நிர்வகிக்கக் கூடிய சிறந்ததொரு ஆளுநரை ஜனாதிபதி நியமிப்பார்.
அதன் மூலம் இன ஐக்கியத்தைக் கட்டி வளர்க்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது” என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.