அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கையகப்படுத்துகின்ற முன்னெடுப்புகள், முயற்சிகள் ஆகியவற்றில் புல்லுருவிகள் சிலர் ஈடுபட்டு உள்ளனர், இவர்களின் அடாவடி ஒருபோதும் வெற்றி அளிக்க போவதில்லை என்றும் இச்சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் கொடுக்கின்ற மாநாடு ஒன்றை இன்று நடத்திய இவர் சங்க யாப்பின் பிரகாரம் உறுப்புரிமையை இழந்த இந்நபர்களின் நடவடிக்கைகள் சட்ட வலுவற்றனவும் செல்லுபடியற்றனவும் ஆகும் என்றும் கூறினார்.
இவர் இங்கு மேலும் தெரிவிக்கையில் 25 வருடங்களாக அவர் கட்டி காத்த சங்கத்தில் இருந்து அவரை வெட்டி போடுவதை சங்க உறுப்பினர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்த அதிருப்தி குழுவினருக்கு பின்னால் அரசியல் கட்சி ஒன்று உள்ளது என்றும் அத்துணிவிலேயே இவர்கள் இயங்குவதுடன் மிரட்டல்களும் மேற்கொள்கின்றனர் என்று சொன்னார்.
இருப்பினும் அதிருப்தி குழுவினரின் பிரச்சினைகளை செவிமடுப்பதற்கு இன்னமும் அவர் தயாராக உள்ளார் என்றார்.