பாறுக் ஷிஹான்-
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் தெரிவானவர்களின் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் 25ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களிடையே நியமனத்திற்கான நேர்முகத்தேர்வுகள் கடந்த ஜுன் மாதம் 28, 29, 30ஆம் திகதிகளில் இடம்பெற்றன. வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த 1046 தொண்டராசிரியர்கள் நேர்முகத் தேர்வுக்கு தோற்றினர். மூன்று நாள்கள், மூன்று அணிகளாக தேர்வுகள் இடம்பெற்றன.
அந்த வகையில் நேர்முகத் தேர்விற்குத் தோற்றிய தொண்டர்களில் 676பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்படுகின்றது.
தெரிவாகியிருக்கும் தகுதி வாய்ந்த 676 ஆசிரியர்களினதும் பெயர்ப் பட்டியல் எதிர்வரும் 25ஆம் திகதி அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர்ப் பட்டியல் கிடைத்ததும் உடன் நியம னத்துக்கான ஏற்பாடு செய்யப்படும். அதே வேளை, வடக்கில் பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியர்கள் 176பேரையும் இந்த 676 நியமனத்துக்குள் உள்ளடக்குவதற்கு முயற்சிக்கப்பட்டது.
இருப்பினும் மேற்கொண்ட முயற்சியின் பயனாக அவர்களுக்கு தனியான ஏற்பாட்டின் கீழ் நியமனம் வழங்க கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்திருந்தது. இந்த ஒப்பந்த ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் வரும் 22ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றார்.