பாறுக் ஷிஹான்-
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தனது முகநூலில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அதற்கு வழங்கப்பட்ட பின்னூட்டல்களை அழித்துள்ளமை அவரது போக்கிலித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இன்றைய தினம்(3.8.2017) '1990 ஆகஸ்ட் 03ம் நாள் காத்தான்குடியில் தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நாள்' என தனது முகநூலில் பதியவிட்டிருந்தார்.
இந்நிலையில் இப்பதிவிற்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சமூக தலைவர்கள் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் தத்தமது விமர்சனங்களை முன்வைத்ததுடன் உறுதியாக ஆயுததாரிகள் என்பதை மாற்றி விடுதலை புலிகள் தான் இச்சம்பவத்தை செய்துள்ளதாக மாற்றி பதியவிடுமாறு கோரி இருந்தனர்.
அதற்கு குறித்த மாகாண சபை உறுப்பினர் அடுத்தடுத்து கேட்கப்பட்ட பின்னுட்டல் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த நிலையில இறுதியாக எல்லா பின்னூட்டல்களையும் தனது முகநூலில் இருந்து தற்போது நீக்கி விட்டு குறித்த பதிவை மட்டும் இணைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காரசாரணமாக விவாதங்களை பின்னூட்டல்களாக முன்வைத்தவர்கள் குறித்த மாகாண சபை உறுப்பினரது தான்தோன்றித்தனமான நடவடிக்கையினை நல்லாட்சிக்காக மக்கள் முன்னணியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
இதன் போது அய்யூப் அஸ்மின் நீக்கப்பட உள்ளார். பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தற்போது தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. அய்யூப் அஸ்மினை பலமுறை விசாரணைக்கு அழைத்தும் கட்சியின் அழைப்பை மதிக்காமல் தொடந்தும் புறக்கணித்துக் கொண்டே வருகிறார். நாளை (04.08.2017) மாலை கூடவுள்ள NFGG யின் தலைமைத்துவ சபை இது தொடர்பான இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தான்தோன்றித் தனமாக தொடர்ந்தும் செயற்பட்டும் கருத்துக் கூறியும் வருகிறார். முறைப்படி விசாரணை செய்ய வேண்டும் என்பதனாலேயே இவ்விடயம் தாமதமாகி வருகிறது. ஆனால் இதனை- அதாவது ஜனநாயகபூர்வமான எமது அணுகுமுறையை- அவர் கட்சியின் பலவீனமாக காட்ட முனைகிறார்.
எதற்கும் ஒரு எல்லை உள்ளது. அவரது விவகாரம் பேசித் தீர்க்கும் எல்லையைக் கடந்து விட்டது. இப்போது கட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றே மக்களது உணர்வுகளோடு விளையாடும் வண்ணம் கருத்துத் தெரிவித்து வருகிறார்.
அதுவும் NFGG யின் முக்கிய ஆதரவுத் தளமான காத்தான்குடி மக்களைத் தூண்டும் வண்ணம் கருத்துத் தெரிவித்துள்ளார். அவரது கருத்து சிறுபிள்ளைத் தனமானது. அதனை NFGG ஒருபோதும் சரி காணவில்லை. காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையை புலிகள்தான் செய்தார்கள் என்பது பகிரங்க உண்மை. அது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்டது. இதை யாரும் புதிதாக நிறுவ வேண்ணடியதில்லை.
அவருக்கு போதிய அவகாசம் கொடுத்தாகி விட்டது. அவர் யாருக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார் என்பதும் தெளிவாகி விட்டது. இதன் காரணமாக அவர் NFGG கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளார். அதனை விரைவில் எதிர்பாருங்கள் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்குறிப்பிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளரான முஹம்மட் அஸ்மி குறிப்பிட்டுள்ளார்.
