அனா-
வாழைச்சேனையில் இடம்பெற்று வரும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துவதுடன், அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்டுத்தருமாறு கோரி வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட முறாவோடை, வாகனேரி, ஆலங்குளம், குகனேசபுரம், புணானை உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அதனை தடுக்க எந்த நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. சிலர் அரசியல் தலைவர்களின் துணையுடன் காணிகளை அபகரித்து வருகின்றனர்.
பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் துணையுடன், தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் அதனைத் தடுப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் யாரும் இதுவரையில் முன்வரவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.
கல்குடா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் எமது பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் நகர்ப்பகுதியில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை வாழைச்சேனை பிரதேச செயலாளர் வாசுதேவனிடம் மகஜர் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கையளிக்கப்பட்டது. இது தொடர்பில் முடிந்த நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாக பிரதேச செயலாளர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உறுதியளித்தார்.
இதன்போது மாணவர்களுக்கு சொந்தமான மைதானத்தை மீட்டுத் தாருங்கள், தமிழ் அரசியல் தலைவர்களே உங்களுக்காக சிறப்புச் சலுகைக்காவும், சொகுசு வாகனங்களை பெறுவதற்காகவும், காட்டும் அக்கறையில் 1 வீதம் ஏனும் தமிழரின் நிலத்தை பாதுகாப்பதில் காட்டுகின்றீர்கள் இல்லையே, இருப்பதையும் இப்பதுதான் நல்லாட்சி தமிழருக்கு தந்த பரிசு, பிரதேச செயலாளரே நீங்களாவது அநீதியின் பக்கம் சோரம் போகாமல் எமக்கு தீர்வு பெற்றுத் தருவீர்கள் என நம்புகின்றோம் என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.