அகமட் எஸ். முகைடீன், சப்னி அஹமட்-
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொத்துவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் திறப்பு விழாவும் வக்பு செய்யும் நிகழ்வும் இன்று (11) வெள்ளிக்கிழமை மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர்களான விஜித் விஜயமுனி சொய்சா, றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஜாமிஆ நளீமியா பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவருமான அஸ்ஷேக் ஏ. சி. அகார் முகம்மதுவினால் விஷேட மார்க்க உபன்னியாசம் நிகழ்த்தப்பட்டதோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஸ்ஷேக் யூசுப் ஹனிபா முப்தியினால் ஜும்ஆ பிரசங்கமும் நிகழ்த்தப்பட்டது.
பொத்துவில் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் எகலியகொடயை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல மாணிக்க கல் வியாபாரியான மர்ஹும் எம்.ஆர்.எம். சதகதுல்லாஹ் ஹாஜியாரின் நிதி ஒதுக்கீட்டில் இப்பள்ளிவாசல் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அவரின் மறைவின் பின்னர் அன்னாரின் பிள்ளைகளினால் நிர்மாணப் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.