அனா-
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மியான்குள பகுதியில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையினால் கொட்டப்பட்டு வந்த திண்மக் கழிவு அகற்றப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் மீள் மர நடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.
புணாணை கிழக்கு கிராம சேகவர் பிரிவிலுள்ள மியான்குள காட்டுப் பகுதியில் திண்மக் கழிவு கொட்டப்படுவதனால் அப்பகுதியில் யானைகள் வருவதால் விவசாயிகள், போக்குரவத்து பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு பிரதேச சபையின் ஆளனியைக் கொண்டு துப்பரவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பாக பிரதேச சபை செயலாளர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார் இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகள் புணாணை கிழக்கு மியான்குள பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. அங்கு கொட்டப்பட்ட திண்மக் கழிவுகள் 97 வீதமானவை அகற்றப்பட்டுள்ளது. மியான்குள திண்மக் கழிவு அக்கற்றப்பட்ட இடத்தை மேம்பாடு செய்யப்பட்டு வனஇலகா திணைக்களத்துடன் இணைந்து மீள் மர நடுகை நடவடிக்கையினை பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் சேரிக்கப்படுகின்ற திண்மக் கழிவுகளில் உக்கக் கூடியவற்றை ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குள் சூடுபத்தினசேனை கிராமத்தில் அமைந்துள்ள பசளை தயாரிக்கும் நிலையத்திற்கு அனுப்பி வைப்பதோடு, உக்க முடியாத திண்மக் கழிவுகளை கொடுவாமடு பகுதிகளுக்கும் அனுப்பி வருகின்றோம்.
வீட்டு உரிமையாளர் தங்கள் வீடுகளிலும், கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளிலும் சேகரிக்கின்ற திண்மக் கழிவுகளில் உக்கக் கூடியவை, உக்க முடியாதவற்றை வேறாக தரம்பிரித்து பிரதேச சபையின் வாகனங்களுக்கு கையளிக்க வேண்டும். அவ்வாறு தரம்பிரித்த திண்மக் கழிவுகளை மாத்திரமே பிரதேச சபை பாரம் எடுக்கும் என்பதை தெரிவிக்கின்றேன் என்றார்.