முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர்களான யோஷித்த, ரோஹித்த ராஜபக்ச ஆகியோர் மீது இன்று முதல் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. இதற்கமைய சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
சீனாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டதாக கூறப்படும் சுப்ரிம் செட் 1 எனும் செயற்கைக் கோள் தொடர்பிலும் அதனுடன் தொடர்புபட்ட நிதி விவகாரங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளவே ரோஹித்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபகஷவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில், ஷிரந்தி ராஜபக்ஷவின் பாதுகாப்பு வீரர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஜீப் வண்டியொன்று தொடர்புபட்டுள்ளதாகவும், அந்த ஜீப் வண்டி செஞ்சிலுவை சங்கத்தால் சிரிலிய சவிய அமைப்புக்கு வழங்கப்பட்டது எனவும், அந்த ஜீப் வண்டி வஸீமின் கொலைக்கு பின்னர் காரணம் இல்லாமல் கறுப்பு நிறமாக நிறமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையிலேயே ஷிரந்தி ராஜபக்ஷவையும் யோஷித்த ராஜபக்ஷவையும் விசாரணை செய்ய குற்றப் புலனாயவுப் பிரிவு தீர்மானித்துள்ளது.
டப்ளியூ. பீ.கே.ஏ.0642 எனும் குறித்த ஜீப் வண்டி தொடர்பில் பிரத்தியேக விசாரணை ஒன்று இடம்பெறும் நிலையிலேயே அவர்கள் இருவரிடமும் அது தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள தீர்மானித்து பொலிஸார் இந்த விசாரணைகளை நடாத்துகின்றனர்.
இதேவேளை, நாளை இரண்டாவது மகனான யோசித்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடாத்தவுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.