மூக்கணாங் கயிறு இல்லாத வண்டிகளை போல முஸ்லிம் சமூகம் தடுமாறுகிறது என முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மருதமுனையில் தெரிவித்தார்.
மருதமுனை Y2K மனாறியன்ஸ் அமைப்பு நடத்திய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு அமைப்பின் தலைவர் ரி.எம்.முபாரிஸ் தலைமையில் (06.08.2017) மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இங்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிறஸ் கட்சின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர்.
இளைஞர்கள் தமது வாக்குப்பலத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். வாக்கினுடைய பலம் என்ன என்பதை மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் எம்மில் விதைத்து காட்டியிருக்கிறாா். இன்று முஸ்லிம் சமூகத்திற்கு தேவையானது கட்சிகள் அல்ல. மாறாக சமூகத்தின் மீது கருணை காட்டக்கூடிய நேர்மையான வழிகாட்டி (அமீர்) தேவையாகவுள்ளது. அது மருதமுனை தொடக்கம் ஒவ்வொரு ஊர்களுக்கும் தேவை.
திருவழாவிற்கு கடைகள் வைப்பது போல் தேர்தல் காலத்தில் எல்லா கட்சிகளுக்கும் கடைவைக்கிறோம். பணத்திற்காக வாக்குப் போடுகின்ற துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இளைஞனும் அதற்கு அடிமையாகிறான் முதியவரும் அதை எதிர்பார்க்கிறார், தாயும் அதைத்தான் சொல்கிறாள். இதனால் கடந்த காலங்களில் நாம் எந்த மீட்சியையும் பெறவில்லை.
நமக்கு என்ன நடக்கிறது என்தை உணர்ந்தால் நமக்கு வழிகாட்ட எவரும் தேவையில்லை. இன்று இஸ்லாமியர்களுக்கு எதிரான சிந்தனைகள் முடக்கி விடப்பட்டுள்ளன. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வாய் கட்டப்பட்டு, கை கட்டப்பட்டு செய்வது அறியாது தவிக்கின்றாா்கள். ஞானசேர தேரரை பொலீஸார் கைது செய்யவில்லை எனப் பேசுகின்றனர். இதனை கேட்கும் போது வெட்கமாக உள்ளது. ஜனாதிபதி, பிரதமர், ஆட்சி அதிகாரம் எல்லாவற்ரையும் உருவாக்கி விட்டு இவ்வாறு பேசுவது இவர்களது ஆற்றாமையை வெளிப்படுத்தி நிற்கிறது. இன்று நீங்கள் சுதந்திரமாக விளையாடுவது போல் இந்த மண்ணில் உங்கள் பிள்ளைகளும் விளையாட வேண்டும் இந்த சூழலை ஏற்படுத்துவதற்காக அன்று நாம் போராடினோம் என்பதை எவரும் இலகுவில் மறந்து விடமுடியாது என்றார்.
இந்த நிகழ்வில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.எப்.ஹிபதுல் கரீம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர்எம்.எப்.எம்.மர்சூக், கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.யாசிர் அறபாத், ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் உட்பட அதிபர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.