மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஐந்து வகையான போக்குவரத்து தவறுகளுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தை அறவிடு வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அது தவிர மேலும் பல்வேறு தவறுகளுக்கான குறைந்தபட்ச தண்டப்பணத்தில் திருத்தம் செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விரைவில் இந்த நடைமுறைகள் அமுலுக்கு வரும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில் பரீசிலிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் மூலம் கீழ்க்காணும் சிபார்சுகளை முன்வைக்கப்பட்டன. அந்த பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கீழ்க்காணும் முக்கிய ஐந்து போக்குவரத்து தவறுகளுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை 25,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1. அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வாகனத்தை செலுத்துதல். 2. போக்குவரத்து அனுமதிப்பத்திரம் அற்ற சாரதி ஒருவரை பணிக்கு அமர்த்துதல். 3. குடிபோதையுடன் வாகனத்தை செலுத்துதல். 4. புகையிரத வீதியினுள் முறையற்ற விதத்தில் மோட்டார் வண்டிகளை செலுத்துதல். 5. அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல் ஆகிய ஐந்து போக்குவரத்து தவறுகளுக்காக 25000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும்.
மேலும் பல்வேறு வகையான போக்குவரத்து தவறுகளுக்காக தற்போது அறவிடப்படுகின்ற குறைந்த பட்ச தண்டப்பணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துதல்.
குறிக்கப்பட்ட வேகத்தை விட 20 வீதம்வரை அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 3,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும், குறிக்கப்பட்ட வேகத்தை விட 20 வீதத்துக்கும் அதிகமான மற்றும் 30வீதத்துக்கும் குறைவான வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 5,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும்.
குறிக்கப்பட்ட வேகத்தை விட 30 வீதத்துக்கும் அதிகமான மற்றும் 50 வீதத்துக்கும் குறைவான வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும். குறிக்கப்பட்ட வேகத்தை விட 50 வீதத்துக்கும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும்.
இடது பக்கத்தால் முன்னோக்கி செல்லுதல்
இக்குற்றத்துக்காக உரிய இடத்திலேயே அறவிடப்படும் வகையில் தண்டப்பணத்தினை 2,000 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிறிதொரு நபரை நோக்கி கவனயீனமாக அல்லது எவ்வித காரணமுமின்றி வாகனம் செலுத்தும் குற்றத்துக்காக 10,000 ரூபா குறைந்தபட்ச தண்டப்பணத்தை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் அல்லது விபத்தொன்றை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் வாகனங்களை செலுத்தும் குற்றத்துக்காக 10,000 ரூபா குறைந்தபட்ச தண்டப்பணத்தை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த வயதுக்கு குறைந்த வயதுடைய ஒருவரினால் வாகனம் செலுத்தப்படும் குற்றத்துக்காக தற்போது காணப்படுகின்ற குறைந்த பட்ச தண்டப்பணத்தினை 5,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்படாத குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை 2,500 ரூபா வரை அதிகரிப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. .
கையடக்கத் தொலைப்பேசியினை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை செலுத்துவது தொடர்பில் 2,000 ரூபா தண்டப்பணம் குறித்த இடத்திலேயே அறவிடப்படும். மேலும் சாரதி புள்ளியிடும் செயன்முறையினை துரிதப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்துக்கள் அதிகம் இடம்பெறும் இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கெமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற உரிய இடத்திலான தண்டப்பணத்தை அறவிடுவதற்காக இலத்திரனியல் செலுத்துகை முறையினை பயன்படுத்துவது குறித்து ஆராயப்படும். அதிவேக வீதிகளில் மற்றும் பெருந்தெருக்களில் பயணிக்க வேண்டிய உயரிய வேகம் தொடர்பில் தெளிவாக பிரசுரிக்கப்படும்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்து போக்குவரத்துக்குரிய ஒன்றிணைந்த நேரசூசியினை அல்லது பொருத்தமான வேலைத்திட்டமொன்றை துரித கதியில் செயற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் தொடர்பான நிர்ணயங்களை மேற்கொள்வதற்கு நிர்வனம் ஒன்றை ஸ்தாபிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து சட்டத்தினை செயற்படுத்துகின்ற சில அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் சட்டத்தினை செயற்படுத்துவதனை உறுதி செய்வதற்காகவும் நவீன தொழில்நுட்ப முறையொன்றை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: எப்போது இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வரும்?
பதில்: திகதி குறிப்பிடப்படவில்லை. விரைவில் அமுலுக்கு வரும்.