க.கிஷாந்தன்-
கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான வருடாந்த தேர்த் திருவிழா கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ. ஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் 11ஆம் திகதிமுதல் 24ஆம் திகதிவரையான பதினான்கு நாட்களும் தினசரி காலை 9.30 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி 108 அஸ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று நண்பகல் சிறப்புபூஜை, மாலை 5 மணிக்கு வசந்தமண்டப பூஜைகள், மும்மூர்த்திகளின் உள்வீதியுலா என்பன இடம்பெற்று வந்தது.
அத்தோடு 19ஆம் திகதி சனிக்கிழமை மாம்பழத் திருவிழாவும், 23ஆம் திகதி புதன்கிழமை திருச்சூரகவேட்டைத் திருவிழாவும், 24ஆம் திகதி வியாழக்கிழமை பறவைக்காவடி, பாற்குடம், கற்பூரச்சட்டி எடுத்துவரப்பட்டு பாலாபிஷேகமும் இடம்பெற்றது.
25ம் திகதி வெள்ளிக்கிழமை மும்மூர்த்திகள் வெளிவீதியுலா இடம்பெற்றது. சுவாமிகள் தேவஸ்தானத்திலிருந்து வெளிவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்புரிந்து மீண்டும் தேவஸ்தானத்தை வந்தடைந்தது.
26 ஆம் திகதி முத்தேர் பவனி ஆலயத்தை வந்தடைந்தவுடன் பச்சை சார்த்தி திருமூர்த்திகளுக்கு பிராயசித்த அபிஷேகம் இடம்பெற்று தீர்த்தோற்சவத்துடன் மாலை கொடியிறக்கம் இடம்பெறுகிறது.
27ஆம் திகதி மாலை பூங்காவனத்திருவிழா திருவூஞ்சல் சண்டேஸ்வரர் உற்சவம் இடம்பெற்று திங்கட்கிமை 28 ஆம் திகதிவைரவர் பூஜையுடன் விழா நிறைவுபெறவுள்ளது.
உற்சவ காலங்களில் அடியார்களுக்கு பகல் மற்றும் இரவு அன்னதானம் வழங்கப்பட்டு வந்ததோடு, இதில் பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.