சப்ரகமுவ, கிழக்கு, வடமத்தி மாகாணசபை தேர்தல்கள் ஒத்திவைக்கப்படக்கூடாது - மனோ கணேசன்

ப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது. இந்த சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற 20ம் திருத்த யோசனையை கைவிட வேடும் என்றும், தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள முடிவுகளை நாம் வரவேற்கிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, 

இந்த ஒத்திவைப்பு அவசியமற்றது. ஒத்திவைக்க அரசியலமைப்பை திருத்த வேண்டும். இது நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதைவிட புதிய அரசியலமைப்பை கொண்டு வரலாம். அதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும். ஆகவே உரிய வேளையில் சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் தேர்தல்களை நடத்துவதே சாலச்சிறந்தது.

ஆனால், அதை அவசர அவசரமாக புது ஒரு தேர்தல் முறைமையை அறிமுகம் செய்து நடத்த முடியாது. உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் நாம் இப்போது ஏற்றுக்கொண்டுள்ள புதிய கலப்பு தேர்தல் முறைமை ஒருமுறை பரீட்சித்து பார்க்கப்பட வேண்டும். எனவே உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் புதிய முறைமையின் கீழ் முதலில் நடத்தப்பட வேண்டும். அதையடுத்து அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கணக்கில் எடுத்து, உருவாக்கப்படும் புதிய மாகாணசபை தேர்தல் சட்டத்தின் கீழ் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதை இப்போது செய்ய முடியாது.

ஆகவே இப்போது நடத்தப்படவுள்ள சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இப்போதும் நடைமுறையில் உள்ள பழைய விகிதாரசார முறைமையின் கீழேயே நடத்தப்பட வேண்டும். இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொது செயலாளர் மகிந்த அமரவீரவிடன் இன்று காலை பேசியிருந்தேன். எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் இந்த பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -