ஹம்ஸா கலீல்-
கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை, வாழைச்சேனை, தெகியத்த கண்டிய பிரதேச வைத்தியசாலைகள் உற்பட 06 வைத்தியசாலைகளை 1A வைத்தியசாலைகளாக தரமுயர்த்துவற்கு கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. அதில் காத்தான்குடி தள வைத்தியசாலை இதற்கான முழு தகுதி இருந்தும் இத் தரமுயர்த்தலில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
இவ் வைத்தியசாலைகளில் அதிக தகுதியுடனும் அவசர சத்திர சிகிச்சை பிரிவு உற்பட ஏனைய ஐந்து பிரிவுகளும் உள்ள வைத்தியசாலை காத்தான்குடி தள வைத்தியசாலை.
இவ்வாறு தரமுயர்த்தலுக்கான சகல தகுதிகளுடனும் இவ் வைத்தியசாலை இருந்தும் கூட, கிழக்கு மாகாணசபையின் இப் புறக்கணிப்பை எதிர்த்து உடனடியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள்
கடந்த (25) வெள்ளிக்கிழமை அன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின அவர்களை சந்தித்து முறையிட்டதற்கமைவாக அமைச்சர் ராஜித சேனாரத்தின சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து அன்று பிற்பகல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களை சுகாதார அமைச்சில் சந்தித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் முன்னாள் காத்தான்குடி நகர முதல்வர் அஸ்பர் (Jp) அவர்களும் கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் போது வைத்திய நிபுணர்கள், ஏனைய பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், ஏன் காத்தான்குடி தள வைத்தியசாலை தரமுயர்த்தப்படவேண்டும் என்பதை தெளிவுபடுத்தினார். அதனை அடுத்து இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் உரிய அறிக்கைகளை பெற்று தரமுயர்த்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அவசரமாக மேற்கொள்வதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு உறுதி மொழி வழங்கினார்.