க.கிஷாந்தன்-
க.பொ.த. உயர்தரப் பரீட்சை 08.08.2017 அன்று ஆரம்பமாகி செப்டம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடுபூராகவுமுள்ள 2230 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 பேர்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 260 விசேட தேவையுடைய பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் 22 பரீட்சை நிலையங்களில் 4000 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். கடவள தமிழ் மகா வித்தியாலயம், ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயம், லக்ஷபான சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய மூன்று இணைப்பு நிலையங்கள் இயங்கவுள்ளது.
முற்பகல் 8.30 தொடக்கம் பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில், தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் காலை 8 மணிக்கு முன்னர் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு ஆணையாளர் கோரியுள்ளார்.
காலக் கிரமத்துடன் பரீட்சை அட்டவணைகளை பரீட்சிக்குமாறு ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை மோசடி தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அந்தவகையில் மலையகத்திலும் 08.08.2017 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.