கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவான நிதி ஒதுக்கீடு மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு என்பவற்றின் மூலம் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று (2) புதன்கிழமை கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி தலைமையில் கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை, கணக்காளர் ஏ.எல். ஜவாஹிர், சமூர்த்தி தலமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர். சாலிஹ், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், ஏ.எம். றினோஸ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுய தொழிலை மேற்கொள்ளும்வகையில் தையல் இயந்திரம், துவிச்சக்கர வண்டி, இடியப்ப உற்பத்தி உபகரணங்கள், நெசவு நூல் சுற்றும் இயந்திரம், தராசு போன்ற பல்வேறுபட்ட உபகரணங்கள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டன. அத்தோடு விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்தோடு அரசாங்கத்தின் ழுNருசு திட்டத்திற்கமைவாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரினால் கல்முனை, கிறீன்பீல்ட் றோயல் வித்தியாலயத்திற்கு மடி கணனி ஒன்று வித்தியாலய அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் கிராம சேவை உத்தியோகத்தர்களின் சேவையினை திறன்பட முன்னெடுப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு அலுவலக கைப்பை இந்நிகழ்வின்போது வழங்கப்பட்டன.