காஷ்மீரில், ராணுவத்தினர்மீது கல் எறிவதும், ராணுவத்தினர் பதிலுக்கு பெல்லட் குண்டுகளால் தாக்குவதும் வாடிக்கையாகிப்போன ஒன்று. இதுபோன்ற சம்பவங்களால் மன வேதனையடைந்த கால்பந்து வீராங்கனை குவாத்ஷியா, இன்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களை அடையாளம் காணத் தொடங்கினார். அவர்களிடத்தில் பேசி, இளைஞர்களின் கவனத்தை கால்பந்து பக்கம் திருப்பினார். கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்களுக்கு கால்பந்து விளையாட்டுமீது ஆர்வம் பிறந்தது.
தற்போது, குவாத்ஷியாவிடம் 200 இளைஞர்கள் பயிற்சிபெற்றுவருகின்றனர். ஸ்ரீநகரில், ஆங்காங்கேயுள்ள மைதானங்களில் தினமும் மாலை 3.30 மணி முதல் இருட்டும் வரை, இளைஞர்களுக்கு அவர் பயிற்சி அளிப்பார். குவாத்ஷியாவின் திறமையை அங்கீகரித்து, காஷ்மீர் மாநில அரசு 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட இருபாலர் அணிகளுக்கு அவரை பயிற்சியாளராக நியமித்துள்ளது.