சிங்கராஜ் இளங்கோவன்-
நுவெரெலியாவில் உயிரிழந்த தனது மகளின் பிணத்தினை அடக்கம் செய்வதற்காகத் தவித்த பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு தமிழ் இளைஞர்கள் தக்க நேரத்தில் உதவியளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
“முடிந்தால் யாராவது இந்தச் சடலத்தை அரசாங்கத்தின் செலவில் புதைத்து விடுங்கள். உங்களுக்கு மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும். என்னிடம் பேருந்தில் செல்வதற்கான பணம் மாத்திரே உள்ளது.” என அந்தத் தாய் தனது மகளின் பிணத்தினை வைத்துக்கொண்டு பல மணி நேரம் கண்ணீர் விட்டு அழுதகொண்டிருந்துள்ளார்.
கடுகண்ணாவை பிரதேசத்தை சேர்ந்த 85 வயதான பம்பரந்தே வணிகரத்ன என்ற இந்தத் தாயின் நிலையைக் கண்டு யாரும் மனம் இரங்கவில்லை. எல்லோரும் அவரை வேடிக்கை பார்பவர்களாகவே இருந்துள்ளனர்.
உயிரிழந்த பெண், மன நிலை பாதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும் நிரோசா பெரேரா எனும் அவருக்கு 51 வயது எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே தனது மகளின் பிணத்தினை வைத்துக்கொண்டு செய்வதறியாது அந்த சிங்கள மூதாட்டி திகைத்துள்ளார்.
இவாறிருக்கையில் நுவரெலியா மாவட்டம் கந்தப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் சிலர் வேறு ஒரு உடலை பெற்றுக் கொள்வதற்காக அந்த வைத்தியசாலைக்கு வந்துள்ளனர். அதன்போது இந்த வயோதிப பெண்ணின் நிலையை அவதானித்துள்ளனர்.
அந்த தாயின் நிலையினால் மனம் கசிந்த அந்த இளைஞர்கள் அனைவரும் இணைந்து பத்தாயிரம் ரூபாவரை தமக்குள் சேர்த்துக்கொண்டனர்.
பின்னர் வைத்தியசாலைப் பொலிஸாரை அழைத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கி பிணத்தை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினர்.
இதனைத்தொடர்ந்து பிணத்தைப் புதைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நெகிழ்ச்சி மிகுந்த சம்பவத்தால் வைத்தியசாலையிலிருந்தோர் அந்த இளைஞர்களை பெருமையோடு உற்று நோக்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.