மியன்மாரும் நாங்களும்
குர்பான் மாடு கொழுக்கலைன்னு
கோவிச்சு கதைக்கிற பாத்தும்மா
பர்மா மக்கள் பசியோடு
படுகிற பாட்டைப் பாரும்மா
ஹஜ்ஜுப் பெருநாள் அபாயாவில்
கல்லு பழசென்று கவலையா?
பச்சப் பிள்ளை சிறுவர்களை
கொல்லும் மியன்மாரை நினைத்துப் பார்.
பலகாரம் கருகிப் போச்சென்று
பதறுதா சாச்சி -மியன்மாரில்
கலவரம் நடந்து வீடு வாசல்
கருகி சருகாய்ப் போயாச்சி
மாறி மாறி அறுப்பு பற்றி
கூறிக் குத்பாவில் அறுப்பவரே
கூறு போட்டு ரோஹிங்யாவில்
கொல்லும் நிலை பற்றி மெளனம் ஏன்?
யாரு செத்தா எனக்கென்ன
என்று இருப்பவர் முஸ்லீமா?
ஆரும் அவஸ்தைப் படுகையில்
அதற்காய்த் துடிப்பவன் முஸ்லீமா?
ஒருதரமேனும் இறைவனிடம்
உயர்த்துவோம் கையை இறைவனிடம்
கருணை ரஹ்மான் கபூல் செய்தால்
கயவர்கள் கொட்டம் அழிந்து விடும்.
Mohamed Nizous