வழிகாட்டல்குழுவின் இடைக்கால அறிக்கையில் பல விடயங்கள் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கின்றன; என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். குறிப்பாக அதிகாரப் பகிர்வு விடயத்தில் அடக்கி மட்டுமல்ல, பல விடயங்களை தொடாமலே விட்டிருக்கின்றார்கள். இதனைப் பார்த்ததும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெகுண்டெழுந்தார். இதில் தமிழர்களுக்கு எதுவுமில்லை; என்றார். அவர் ஒரு சட்டம் படித்தவர். உள்ளதை வாசித்துப் பார்த்தார். உள்ளதை உள்ளபடி சொன்னார்.
திரு சுமந்திரனும் சேர்ந்து எழுதிய இடைக்கால அறிக்கையில் எப்படி தமிழர்களுக்கு எதுவும் இல்லாமல் போனது. அதேநேரம் சம்பந்தன் ஐயா அவர்கள் இடைக்கால அறிக்கையை விமர்சிக்க வேண்டாம்; என கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்திருக்கின்றார். தமிழர்களுக்கு எதுவுமில்லாத அறிக்கையை ஏன் தமிழர்கள் விமர்சிக்கக் கூடாது?
அவ்வாறாயின் எழுதாத பல விசயங்கள் அந்த அறிக்கையில் இருக்கின்றன; என்றுதானே பொருள். திரு விக்னேஸ்வரனுக்கு சட்டம் தெரியும் ஆனால் அரசியல் அனுபவமில்லையே! எனவே தாளில் எழுதியிருப்பதை மாத்திரம் பார்த்துவிட்டு அவர் பேசுகின்றார். ஆனால் சம்பந்தன் ஐயா அப்படியா? எனவே அவருக்கு தாளில் எழுதாததும் புரியும். திரு விக்னேஸ்வரனுக்கும் புரியவைத்துவிட்டார்கள் போலும். அவரும் தற்போது அமைதியாகி விட்டார்.
இந்நிலையில் முஸ்லிம்களின் நிலை என்ன? தாளில் எழுதியிருப்பதையே புரிந்துகொள்ள முடியாதவர்கள் நம் பிரதிநிதிகள், எழுதாததைப் புரிந்துகொள்வார்களா?
கல்வி கற்ற முஸ்லிம் சிவில் சமூகமே!!! இப்பொழுது நீ என்ன செய்யப் போகிறாய். நமது பிரதிநிதிகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் நமது வாக்குரிமையில் பாதியை காவு கொடுக்க நீ அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்ததுபோல் இந்த அதிகாரப் பகிர்வு விடயத்திலும் நன்றாகத் தூங்கிவிட்டு நமது பிரதிநிதிகள் நமது எதிர்காலத்தைப் பறிகொடுத்துவிட்டு ' ஏதோ தவறு நடந்துவிட்டது' என்பார்கள், அப்பொழுதா விழித்தெழப்போகிறாய்?
புரியாத போராளிகள் எல்லாவற்றிற்கும்
கோசம் எழுப்புவார்கள்தான். அவர்களை நம்பித்தானே நம்மவர்களின் அரசியல் வண்டி ஓடுகிறது. நீ ஒரு புத்திஜீவி, நீயும் அமைதியாக இருந்தால் அது சமூகத் துரோகமில்லையா? அப்படியானால் உனக்கும் இந்த அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?
எனவே, உன்கடமையை மறந்துவிடாதே! இன்று இந்த இரண்டு சட்ட விடயங்களிலும் பாடம் படித்தபின் நீ தூங்குவது நியாயம் இல்லை. விழித்தெழு. உன் தோளில் சுமத்தப்பட்டிருக்கும் இந்த சமூகக் கடமையைச் செய்வதற்குப் புறப்படு. உன்பின்னால் வருவதற்கு ஆயிரமாயிரம் நேர்மையான, நடுநிலையான வாலிபர்கள் இருக்கின்றார்கள். உண்மை புரிந்ததும் நம் போராளிகளும் உன் பின்னால் வந்துவிடுவார்கள்.
புறப்படு! உன் சமூகத்தைக் காக்க உன் உறக்கம் துறந்து புறப்பட்ட புத்திஜீவியாய் புறப்படு!
நம்பு, உன் பின்னால் அணிதிரள ஆயிரம் ஆயிரம் வாலிபர்கள் இருக்கின்றார்கள்.
என் சமூகத்தைக் குழிக்குள் தள்ள நீ எதை எழுதினாலும் அதை அனுமதிக்கமாட்டேன்! நல்லாட்சி அரசே! என்ற கோசம் வானை முட்டட்டும்.
இன்னொருதடவை இந்த நல்லாட்சி அரசு முஸ்லிம்களுக்கு துரோகம் செய்ய அனுமதிக்க முடியாது.
புறப்படு.
இனி, இந்த இடைக்கால அறிக்கையில் எழுதியிருப்பதென்ன? எழுதாமல் எழுதியிருப்பதென்ன என்பவற்றிற்கு வருவோம், இன்ஷாஅல்லாஹ்
தொடரும்