உச்ச சுயநலமும் விகார எண்ணங்களும் தொலைந்து போகட்டும்...
மனித குலத்தவர் மனங்களில் தியாக உணர்வு தளிர் விடட்டும்...
மகத்துவமிக்க ஹஜ்ஜூப் பெருநாளை நம் நாட்டு உடன்பிறப்புகளும் உலகெங்கும் பரந்துவாழும் முஸ்லிம் உம்மத்துகளும் தியாக உணர்வுகளோடு மகிழ்வுடன் இன்று கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப்பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் மனநிறைவுமடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவனுடைய உயர் சோதனையில் வெற்றிபெற்ற ஒரு குடும்பத்தின் மூன்று தியாக சீலர்களாம் அல்லாஹ்வின் தோழரான நபி இப்றாஹிம்(அலை), அவரின் துணைவியார் அன்னை ஹாஜரா நாயகி, தவப்புதல்வன் நபி இஸ்மாயில் (அலை) ஆகியோரின் மாபெரும் தியாகம் சர்வ உலகத்திற்கும் படிப்பினையைத் தந்ததோடு நம் முன்னவர்கள் போல் இத்தியாகம் நம்மால் நினைவுகூறப்படவேண்டிய ஒன்றுமாகும்.
அன்னார்களின் தியாகத்திற்கான உயர்ந்த சண்மானமே ஹஜ்ஜூப் பெருநாளாகும். இந்நாளில் மனித குலத்தவர் வாழ்வில் தியாக உணர்வு மென்மேலும் அதிகரிக்கப் பிரார்த்திக்கின்றேன்.
நமது நாட்டில் இவ்வாறான தினங்களை சந்தோசமாகவும் நிம்மதியாகவும் கொண்டாட முடியாத வரலாறு இருந்தது. அவ்வாறான கரைபடிந்த அத்தியாயம் நீங்கி நாம் அனைவரும் நிம்மதியுடனும் சந்தோசத்துடனும் மகத்துவமிக்க இத்தினங்களை கொண்டாடுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போம்.
முஸ்லிம் நாடுகளில் இஸ்லாத்தின் விரோத சக்திகளால் திட்டமிட்டு பிரிவினைகள் தோற்றுவிக்கப்பட்டு யுத்த சூழ்நிலைகளும் வரவழைக்கப்பட்டு மனிதகுல அவலங்களுக்கு மத்தியிலும் நமது முஸ்லிம் உம்மத்துக்கள் இன்றைய தினத்திற்கு முகம் கொடுக்கின்றனர். மேலும், பர்மா போன்ற நாடுகளில்; சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழ்வதால் வேண்டுமென்றே அவர்கள் விரட்டப்பட்டும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கப்பால் சொல்லொன்னா அவலங்களை அம்மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். புனிதமிக்க இந்நாளில் அவர்கள் அனைவருக்குமாக இருகரமேந்திப் பிரார்த்திப்போமாக!
பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் எல்லா இன மக்களும் ஒற்றுமையோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கும் இனங்களுக்கிடையில் பிரிவினைகளை ஏற்படுத்த முனையும் தீய சக்திகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் இறைவனிடம் வேண்டுவோமாக.
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு புனித மக்கமா நகரம் சென்றுள்ள ஹஜ்ஜாஜிகளின் ஹஜ் கடமை அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்கும் பிரார்த்திப்போமாக.
ஏ.எல்.எம். அதாஉல்லா
தலைவர் - தேசிய காங்கிரஸ்