அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- மயிலவெவ பகுதியில் வீட்டுக்கு பின் புறமாகவுள்ள காட்டுக்குள் விறகு எடுக்கச்சென்ற தாயும் -மகளும் கரடி தாக்குதலுக்குள்ளான நிலையில் இன்று (04) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்துயசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு கரடித்தாக்குதலுக்குள்ளானவர்கள் அதே இடத்தைச்சேர்ந்த எச்.பிசோ மெனிகா (42வயது) மற்றும் மகளான எஸ்.சுனேத்ரா (28வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த இருவரும் அவரது வீட்டுக்கு பின்னாலுள்ள காட்டுக்குள் விறகு எடுப்பதற்காக சென்று வீழ்ந்து கிடந்த மரமொன்றினை வெட்டிய போது மரத்திற்கருகில் உறங்கிக்கொண்டிருந்த கரடி தாயை தாக்கியதுடன் மகள் கரடியை கோடாரியினால் தாக்கியுள்ளார். அதேவேளை மீண்டும் மகளை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மகளான எஸ்.சுனேத்ரா வைத்தியரிடம் தெரிவித்தார்.
கரடி தாக்குதலுக்குள்ளான தாயும் -மகளும் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.