அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் திடீர் நடவடிக்கையின் காரணமாக கிழக்கு மாகாண திணைக்களம் மற்றும் அமைச்சுகளில் கடமையாற்றிய 7 செயலாளர்களுக்கு அவசர இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. திணைக்களங்கள் மற்றும் அமைச்சுகளில் கடமையாற்றிய 7 செயலாளர்களுக்கே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடமாற்றங்களைப் பெற்றவர்கள் தங்களின் பொறுப்புகளை இன்று (04) திங்கட்கிழமையில் இருந்து பொறுப்பேற்றுச் செய்யுமாறும் அவர்களுக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
மேற்படி இடமாற்றங்களைப் பெற்றவர்களின் விவரம்:-
பொதுநிர்வாக அமைச்சின் செயலாளராக இருந்த ஏ.எச்.எம்.அன்சார் பயிற்சி மற்றும் ஆளணிப்பிரிவுக்கும் ஆளுநரின் செயலாளராக இருந்த திருமதி முரளிதரன் பொது நிர்வாக அமைச்சின் செயலாளராகவும் பயிற்சி மற்றும் ஆளணிப்பிரிவின் செலாளராக இருந்த திருமதி கலாமதி பத்மராஜா சுகாதார அமைச்சின் செலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வந்த கே.கருணாகரன் வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கும் வீதி அபிவிருத்தித் திணைக்கத்தில் பணியாற்றிய ஐ.கே.ஜீ.முத்துபண்ணா பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கும் அதில் கடமையாற்றியிருந்த எம்.டப்ளியூ.ஜீ.திஸாநாயக்க கல்வி அமைச்சுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.பி.எம்.அசங்க அபேவர்த்தன ஆளுநரின் செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.