அனிதா என்று
இனிதாக வாழ்ந்த பெண்
இனி தாங்க முடியாது என
தனியாக செத்துப் போனாள்
மூட்டு வலிக்க
மூட்டை சுமக்கும் தந்தை.
கூட்டிலே தாயின்றிக்
கூவினாள் தனியாக.
கழிவறை கூட இன்றி
காட்டாறாய் வறுமை தாக்க
வெறியோடு படித்தாள்
வெற்றியோடு முடித்தாள்.
மருத்துவம் கற்பதற்கு
பொருத்தமாய் புள்ளி பெற்றும்
விதி
மோடியின் முதுகில் ஏறி
ஓடி வந்து
உட்கார்ந்து கொள்ள
அந்தச்
சின்னப் பெண்ணின் எதிர்காலம்
சின்னாபின்னமாகிப் போனது.
ஓடி ஓடி
கேடிகளையும்
கோடிகளையும் கவனித்த
மோடி அரசு
கிராமங்களின்
கோடிகளில் வாழ்ந்த
குப்பத்து மக்களை
வாடி ஏங்க விட்டது.
ஆட்டுக்கு காவல்
மாட்டுக்குக் காவல் என்று
ஆர்ப்பரித்த அரசு
நாட்டின் ஏழைக்கு
வேட்டு வைக்க
நீட் எனும் துப்பாக்கியை
நீட்டிப் பிடித்தது.
' நீட்'டை நிறுத்து என
போட்ட கோஷமெல்லாம்
கேட்டுத் திருந்தாத
நாட்டு அரசு
அனிதாக்களைக் கொன்று
அரங்கேற்ற நினைப்பது
தாழ்த்தப்பட்ட இனங்கள்
வீழ்த்தப்பட வேண்டும்
உள்ளவனே தொடர்ந்து
உயரப் பறக்க வேண்டும்.
மோடியின் தலைமையில்
நாடு இருக்கும் வரை
அனிதாக்கள் பல பேர்கள்
அநியாயமாச் சாவதை
ஆராலும் நிறுத்த முடியாது.