தலவாக்கலை பி.கேதீஸ்-
எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கத்தில் பணியாற்றும் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் இம் மாத சம்பளத்தை எதிர்வரும் 16 ம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு நுவரெலியா மாவட்ட மலையக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் அரச பணியாளர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
வழமையாக ஆசிரியர்களுக்கு 20ம் திக்தியும், ஏனைய அரச ஊழியர்களுக்கு 25 ஆம் திகதியும் சம்பளம் கணக்கில் இடப்படுவது வழமையாகும். இம் மாதம் 18 ஆம் திகதி தீபாவளிப் பண்டிக்கை கொண்டாடப்பட இருப்பதால், சம்பளத்தை முற்கூட்டி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனவே இதுதொடர்பாக மலையகத்தை பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது எமது நாட்டில் அரச ஊழியர்களுக்கு மத ரீதியான பண்டிகைகளுக்கு முன்கூட்டியே சம்பள பணம் வழங்கப்படுவதில்லை. தேசிய பண்டிகையான தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு மாத்திரமே சம்பள பணம் முற்கூட்டியே வழங்கப்படும்.
மத ரீதியான பண்டிகைகளுக்கு இச்சலுகை வழங்கப்படமாட்டாது. இப்பண்டிகைகளுக்கான முற்பணத்தை அரசாங்கம் முற்கூட்டியே வழங்குகின்றன.இதில் பெரும்பான்மையான அரச தமிழ் ஊழியர்கள் முற்பணத்தை சித்திரை புத்தாண்டின்போதே பெற்றுக்கொள்கின்றனர்.
எனவே ஆசிரியர்களுக்கு ஏனைய அரச ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட திகதியிலேயே சம்பளம் வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.