க.கிஷாந்தன்,தலவாக்கலை பி.கேதீஸ்-
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரில் கடந்த 17ந் திகதி காணாமல்போன 18 வயதுடைய இளைஞன் 21.10.2017 அன்று மதியம் மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் புத்தளம் கந்தகுடா பகுதியைச்சேர்ந்த முகமது நிலாம்தீன் முகமது அஸ்ஜட் வயது 18என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆற்றில் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
தலவாக்கலை பகுதிக்கு வருகைதந்து தலவாக்கலை நகரசபையின் கடையொன்றினை கூலிக்காக பெற்று அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு மேற்படி ஊழியர், கடந்த 17 ம் திகதி இரவு கழிவறை செல்வதாக கூறிவிட்டு சென்றவர் 18.10.2017 அன்று வரை வராதமையினால் கடை உரிமையாளரினாலும், சக ஊழியர்களினாலும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இவரது புகைப்படத்துடன் காணவில்லையென செய்திகளும் ஊடகங்களின் மூலமாக வெளியாகியிருந்தன. எனினும் அடையாளம் காணாத நிலையில் 21.10.2017 அன்று பிரதேசவாசிகள் சடலத்தை கண்டு அறிவித்ததையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இது கொலையா தற்கொலையா என பலகோணங்களில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.